இந்தியாவில் புதிய சாதனை படைத்தது மாருதி சுஸுகி எர்டிகா!
மாருதி சுஸுகி எர்டிகா கார் இந்தியாவில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆல் நியூ 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் கூடிய புதிய தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்ட உடனேயே வாடிக்கையாளர்கள் மத்தியில் பேசு பொருளாக உருவெடுத்தது புதிய தலைமுறை எர்டிகா. அத்துடன் வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் அமோக ஆதரவின் காரணமாக அதன் விற்பனையும் சிறப்பாக இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி எர்டிகா கார்களின் எண்ணிக்கை தற்போது தெரியவந்துள்ளது. இதன்படி மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதம் 8,955 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெறும் 5,086 எர்டிகா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. இதன்மூலம் மாருதி சுஸுகி எர்டிகா 76 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் தனது அதிகபட்ச மாதாந்திர விற்பனை எண்ணிக்கையையும் மாருதி சுஸுகி எர்டிகா பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் எர்டிகா கார்கள் விற்பனையானது கிடையாது. இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக கார் என்றால், அது புதிய எர்டிகாதான். விற்பனை அடிப்படையில், மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா (Toyota Innova Crysta) மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ (Mahindra Marazzo) உள்பட தனது அனைத்து 7 சீட்டர் போட்டியாளர்களையும் மாருதி சுஸுகி எர்டிகா வீழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் விற்பனையான மஹிந்திரா பொலிரோ கார்களின் எண்ணிக்கை 8,019. அதே சமயம் டொயோட்டா நிறுவனம் 6,984 இன்னோவா கிரிஸ்டா கார்களை மட்டுமே கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா மராஸ்ஸோ கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை வெறும் 2,751 மட்டுமே.

புதிய எர்டிகா காரானது, ஐந்தாம் தலைமுறை Heartect பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முந்தைய மாடலை காட்டிலும், தற்போதைய எர்டிகா காரின் நீளம், அகலம், உயரம் ஆகியவை அதிகரித்துள்ளது. புதிய தலைமுறை எர்டிகா காரின் நீளம் 4,395 மிமீ. அகலம் 1,735 மிமீ. உயரம் 1,690 மிமீ. அதே சமயம் வீல் பேஸ் மாற்றம் செய்யப்படவில்லை. பழைய அளவான 2,740 மில்லி மீட்டரே நீடிக்கிறது.

முந்தைய மாடலை காட்டிலும் புதிய மாடலில் இன்ஜின் காம்பார்ட்மென்ட் சிறியதாக உள்ளது. இதன் காரணமாக இடவசதி அதிகரித்துள்ளது. குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளில் இடவசதி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019 மாருதி சுஸுகி எர்டிக காரின் பூட் ஸ்பேஸ் 209 லிட்டர்கள். ஆனால் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்து வைத்து கொள்வதன் மூலமாக பூட் ஸ்பேஸை 803 லிட்டர்களாக அதிகரித்து கொள்ள முடியும்.

மாருதி சுஸுகி எர்டிகா காரின் இந்த பிரம்மாண்டமான விற்பனைக்கு அதன் பிரீமியம் டிசைன் ஒரு காரணம். அத்துடன் ட்யூயல் பேட்டரி செட் அப் உடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினையும் இதன் விற்பனை அதிகரிப்பிற்கு ஒரு காரணமாக கூறலாம். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த இன்ஜின் 2018ம் ஆண்டின் மத்தியிலேயே மாருதி சுஸுகி சியாஸ் (Maruti Suzuki Ciaz) காரில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இந்த இன்ஜின் 6,000 ஆர்பிஎம்மில் 105 பிஎஸ் பவரையும், 4,400 ஆர்பிஎம்மில் 138 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.


Click it and Unblock the Notifications








