விரைவில் அறிமுகமாகிறது புதிய டீசல் எஞ்சினுடன் மாருதி எர்டிகா கார்!
மாருதி எர்டிகா காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

எம்பிவி ரக கார் மார்க்கெட்டில் மாருதி எர்டிகா மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. சரியான விலையில் நிறைவை தரும் 7 சீட்டர் மாடல் என்பதால் விற்பனையிலும் கலக்கி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பழைய மாடலைவிட அதிக இடவசதி, புதிய டிசைன் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டதுடன், புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது. மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் பெட்ரோல் மாடலில் கொடுக்கப்பட்டது. டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் தக்க வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் தலைமுறையாக வந்த புதிய மாருதி எர்டிகா காருக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த மாதம் 8,955 மாருதி எர்டிகா கார்கள் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்தது. இந்தநிலையில், மாருதி எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரலில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், மாருதி எர்டிகா காரில் தொடர்ந்து 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்காக, சுஸுகி நிறுவனம் சொந்தமாக உருவாக்கி இருக்கும் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் எர்டிகா காரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அண்மையில் இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சியாஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக உள்ளது. இந்த மாடலுடன் புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எர்டிகாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த புதிய எஞ்சின் குறைவான மாசு உமிழ்வு திறனை பெற்றிருப்பதோடு, அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் விதத்தில் வர இருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவல் இருக்கிறது. எனினும், தற்போது விற்பனையில் இருக்கும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினைவிட சற்று விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டு சந்தைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








