மாருதி ஜிப்ஸி விற்பனை நிறுத்தம்... ஜிம்னி அறிமுகமாகுமா என எதிர்பார்ப்பு
மாருதி ஜிப்ஸி எஸ்யூவியின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் வாரிசாக கருதப்படும் ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாருதி ஜிப்ஸி எஸ்யூவி இந்தியாவில் மிக நீண்டகாலமாக இருந்து வருகிறது. குறிப்பாக, 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஜிப்ஸி, இந்திய ராணுவ பயன்பாட்டில் அதிக அளவில் பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. மாருதி ஜிப்ஸி எஸ்யூவியில் 1.3 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்பட்டது. இந்த எஞ்சின் 81 பிஎஸ் பவரையும், 103 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக கிடைத்தது.

இந்த நிலையில், ராணுவத்திடமிருந்து ஜிப்ஸி எஸ்யூவிக்கு கொள்முதல் இல்லாததால், அதன் வர்த்தகம் முடங்கியது. மாருதி ஜிப்ஸிக்கு பதிலாக டாடா சஃபாரி எஸ்யூவியை இந்திய ராணுவம் ஆர்டர் செய்தது. மேலும், தனிநபர் மார்க்கெட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்வதற்கும், புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளும் இதற்கு எதிராக இருக்கிறது.

இதுவரை ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. வெளிநாடுகளில் விற்பனையில் இருந்த சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் இரண்டாம் தலைமுறை மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஜிப்ஸி மாடல்தான் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வர்த்தகம் பொய்த்து போனதால், ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாருதி விடை கொடுத்துள்ளது. இந்த சூழலில், வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் நான்காம் தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவியை இந்தியாவில் மாருதி கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த ஆண்டுதான் புதிய சுஸுகி ஜிம்னி அறிமுகம் செய்யப்பட்டது.

ஏனெனில், ஜிம்னி எஸ்யூவி ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடல். தற்போது மஹிந்திரா தார் எஸ்யூவிதான் முதன்மை தேர்வாக இருக்கிறது. இதற்கடுத்து, ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவி பட்ஜெட் விலை மாடலாக இருந்து வருகிறது. இந்த ரகத்தில் ஜிம்னியை நிலைநிறுத்தினால், ஓரளவு வர்த்தக வாய்ப்பை ஜிம்னி எஸ்யூவி பெறும் வாய்ப்பு இருக்கிறது.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியில் 100 பிஎச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இது 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது. எனினும், 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் மாருதி சுஸுகியிடம் இல்லை. எனவே, புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

எனினும், மாருதி ஜிப்ஸி உற்பத்தி தொடர்ந்து இந்தியாவில் நடக்கிறது. கென்யாவிற்கு இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஏற்பட்ட வர்த்தக இழப்பை சரிகட்டும் விதத்தில், மேலும் சில ஆப்பிரிக்க நாடுகளில் ஜிப்ஸி காரை அறிமுகம் செய்யும் திட்டம் சுஸுகியிடம் இருப்பதாக தெரிகிறது.

டொயோட்டா கூட்டணியில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. எனினும், இந்தியர்களுக்கு புதிய மாருதி ஜிப்ஸியை வாங்கும் வாய்ப்பு இல்லை என்பதுடன், புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவியும் இந்தியாவில் இப்போதைக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








