பிஎஸ்6 கார்களின் தயாரிப்பில் தனது முடிவை மாற்றிக்கொள்ளும் மாருதி சுசுகி...
மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் டீசல் என்ஜின் கார்களின் தயாரிப்பை சிறிது காலம் நிறுத்தி வைக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் மாருதி நிறுவனம் சில மாடல் கார்களுக்கு மட்டும் டீசல் வேரியண்ட்டை அடுத்த ஆண்டும் தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாருதி சுசுகி நிறுவனம் டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பை நிறுத்த முடிவெடுத்ததற்கு மிக முக்கிய காரணம் புதிய மாசு உமிழ்வு விதி தான். அரசாங்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய மாசு உமிழ்வு விதியை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்களது தயாரிப்புகளை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றி வருகின்றன.

அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனமும் தனது கார்களை பிஎஸ்6 மாற்ற, அவற்றின் டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பிற்கு அதிக செலவு ஆகுவதாகவும் இப்போதைய டீசல் வேரியண்ட்களையே அதன் அதிக விலையினால் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் தேர்ந்தெடுப்பதில்லை, பிஎஸ்6 மாற்றத்தால் அவற்றின் விலை இன்னும் அதிகரிக்கப்பட்டால் கண்டிப்பாக வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுவது கடினம் என டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவித்தது.

ஆனால் தற்போது மாருதி சுசுகி நிறுவனம் டீசல் கார்களின் தயாரிப்பு நிறுத்த முடிவை மறு பரிசீலனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் டீசல் கார்களின் தயாரிப்பை நிறுத்தினால் இந்திய மார்க்கெட் பங்கில் மிக பெரிய பகுதியை இழக்க வேண்டியதாக இருக்கும். அதுமட்டுமின்றி இந்நிறுவனத்திற்கு சளைக்காமல் கடுமையாக போட்டி கொடுத்து கொண்டுவரும் ஹூண்டாய் நிறுவனம் டீசல் தயாரிப்புகளை நிறுத்தவுள்ளதாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

மாருதி சுசுகி நிறுவனம், பிஎஸ்6 டீசல் கார்களை தயாரிக்கவே போவதில்லை என்கிற நிலைப்பாட்டில் இல்லை. 2021ஆம் ஆண்டு முதல் பிஎஸ்6 டீசல் தயாரிப்புகள் அறிமுகமாகும் என்று தான் கூறியிருந்தது. இந்நிறுவனத்தின் சேர்மன் ஆர்சி பார்கவா-வும் சமீபத்திய பேட்டியில், டீசல் வேரியண்ட் கார்கள் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து தயாரிக்கப்படும் என்று தான் கூறியிருந்தார்.

பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்படவுள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களை மாருதி நிறுவனத்தின் சியாஸ், எர்டிகா மற்றும் எஸ்-க்ராஸ் மாடல்கள் தான் முதலாவதாக பெறவுள்ளன. இவற்றிற்கு அடுத்து ஏழு இருக்கை அமைப்பில் அறிமுகமாகவுள்ள விட்டாரா பிரெஸ்ஸா மாடல் இதே என்ஜினை பெறவுள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமாகும் விட்டாரா பிரெஸ்ஸாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனில் பிஎஸ்6-க்கு இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. நான்கு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட இந்த பெட்ரோல் என்ஜின் 104.7 பிஎச்பி பவரையும் 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

குறைந்த விலை கொண்ட கார்களுக்கு ஹைப்ரீடு என்ஜின் தேர்வை வழங்கவும் மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இவற்றுடன் டீசல் மற்றும் சிஎன்ஜி என்ஜின் தேர்வுகளையும் அடுத்த ஆண்டில் பிஎஸ்6 தரத்தில் வெளியாகவுள்ள குறைந்த விலை கொண்ட கார்களில் எதிர்பார்க்கலாம்.

டீசல் வேரியண்ட் கார்களுக்கு 1.3 லிட்டர் டிடிஐஎஸ்200 நான்கு-சிலிண்டர் என்ஜின் தான் அடுத்த சில வருடங்களுக்கு பொருத்தப்படவுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்களை போல பிஎஸ்6-க்கு மாற்றப்படும் டீசல் கார்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்படவுள்ளது. இதே 1.5 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் தான் மாருதியின் கூட்டணி நிறுவனமான டொயோட்டாவும் தனது பிஎஸ்6 கார்களுக்கு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








