தள்ளாடும் மாருதி சுஸுகி... ஐசியூவில் ஆட்டோமொபைல் துறை... அறுவை சிகிச்சையை உடனே செய்யுமா மோடி அரசு?
ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையும் தள்ளாடி கொண்டிருக்கும் சூழலில், மாருதி சுஸுகி நிறுவன கார்கள் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு தற்போது அவசர அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. மருத்துவரான மத்திய அரசு அறுவை சிகிச்சையை உடனடியாக செய்யாவிட்டால், நிலைமை இன்னும் சிக்கலாகி விடும். ஆம், இந்திய ஆட்டோமொபைல் துறை முன்னெப்போதும் இல்லாத கஷ்ட காலத்தில் தற்போது சிக்கி கொண்டுள்ளது.

அனைத்து முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் கடந்த சில மாதங்களாக செங்குத்தாக சரிந்து வருகிறது. எனவே பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து உற்பத்தியை குறைத்து கொண்டே வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் சுமார் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோகும் வாய்ப்புகள் உள்ளதாக வல்லுனர்கள் அபாய சங்கு ஊதி கொண்டுள்ளனர்.

பிரச்னை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் கூட, மத்திய அரசு பெரிதாக சட்டை செய்யாமல் இருப்பது நல்லதல்ல எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இந்திய ஆட்டோமொபைல் துறையில் தற்போது வீசி வரும் புயலுக்கு பல்வேறு நிறுவனங்களும் இரையாகி வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியும் கூட இதில் இருந்து தப்பவில்லை. மாருதி சுஸுகி ஷோரும்கள் தற்போது காத்து வாங்க தொடங்கியுள்ளன.

மாருதி சுஸுகி கார்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவடைந்து கொண்டே வருகிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்த கார்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 1,54,427.

இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெறும் 98,210 ஆக சரிவடைந்துள்ளது. இது 36 சதவீத வீழ்ச்சி என்பதுதான் அதிர்ச்சிக்கு காரணம். குறிப்பாக மாருதி சுஸுகி நிறுவனத்தின் மினி மற்றும் காம்பேக்ட் கார் செக்மெண்ட் மிக கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதில், ஆல்டோ மற்றும் பழைய வேகன் ஆர் கார்களை உள்ளடக்கிய மினி கார் செக்மெண்ட் (எண்ட்ரி லெவல் செக்மெண்ட்) 69.3 சதவீத சரிவை சந்தித்துள்ளது. மினி செக்மெண்ட் கார்களின் விற்பனை 37,710 யூனிட்களில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 11,577 யூனிட்களாக குறைந்துள்ளது.

அதேபோல் ஸ்விப்ட், இக்னிஸ், பலேனோ, டிசையர் மற்றும் புதிய வேகன் ஆர் ஆகிய கார்களை உள்ளடக்கிய காம்பேக்ட் செக்மெண்ட் 22.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 74,373 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 57,512 யூனிட்களாக குறைந்துள்ளது.

அதே சமயத்தில் எர்டிகா, எஸ்-க்ராஸ் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களை உள்ளடக்கிய பயன்பாட்டு வாகனங்கள் (UV - Utility Vehicles) செக்மெண்ட்டும் 38 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
யுடிலிட்டி வெய்கில்ஸ் செக்மெண்ட்டை போல், வேன் செக்மெண்ட்டும் 38 சதவீத சரிவை கண்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேன் செக்மெண்ட்டில், ஆம்னி மற்றும் ஈக்கோ ஆகிய வாகனங்கள் அடங்குகின்றன. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 15,791 யூனிட்களாக இருந்த இந்த செக்மெண்ட் வாகனங்களின் விற்பனை கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெறும் 9,814 ஆக குறைந்துள்ளது.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கூட மாருதி சுஸுகி நிறுவனத்தின் கமர்ஷியல் வாகனங்கள் கடந்த மாதங்களில் வளர்ச்சியை பதிவு செய்து வந்தன. ஆனால் அவையும் கூட தற்போது உத்வேகத்தை தவற விட்டுள்ளன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் எல்சிவியான சூப்பர் கேரி 0.5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,732 யூனிட் சூப்பர் கேரி மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுபோதாதென்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏற்றுமதி விற்பனையும் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 9.4 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 10,219 யூனிட்களாக இருந்த ஏற்றுமதி விற்பனை, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 9,258 யூனிட்களாக சரிவடைந்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி கடந்த சில மாதங்களாகவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை தொடர்ந்து சரிந்து கொண்டேதான் வருகிறது. இதில், இருந்து மீண்டு வர மாருதி சுஸுகி முயன்றும் கூட முடியவில்லை. மாறாக விற்பனை இன்னும் கடுமையாக சரிவடைகிறது. எனினும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் காட்சிகள் மாறும் என நம்பி கொண்டுள்ளது மாருதி சுஸுகி.

முன்னதாக ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆட்டோமொபைல் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்டெடுக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு ஏனோ தொடர்ந்து மறுத்து வருகிறது. ஏன்? என்பது உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.


Click it and Unblock the Notifications