வீட்டிலேயே கார் சர்வீஸ்... மாருதியின் அசத்தல் சேவை திட்டம் அறிமுகம்!
வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே கார் சர்வீஸ் செய்து தரும் புதிய திட்டத்தை மாருதி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கார் விற்பனையில் நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. மேலும், விற்பனைக்கு பிறகு சிறந்த சேவையை அளிப்பதில் மாருதி கார் நிறுவனம் முதன்மையாக விளங்குகிறது. நாடுமுழுவதும் உள்ள 1,800 நகரங்களில் 3,600 சர்வீஸ் மையங்களுடன் மிக பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கை மாருதி பெற்றிருக்கிறது.

இதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் விதத்தில், புதிய சேவை திட்டத்தை அறிவித்துள்ளது. சர்வீஸ் ஆன் வீல்ஸ் என்ற பெயரில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சர்வீஸ் மையங்களில் செய்யப்படும் வழக்கமான பராமரிப்புப் பணிகளை இந்த சர்வீஸ் ஆன் வீல்ஸ் என்ற திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இதற்காக வடிவமைக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக நடமாடும் வாகனம் மூலமாக சர்வீஸ் செய்வதற்கான உபகரணங்களுடன் வந்து வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே சர்வீஸ் செய்து தர இருக்கிறது.

இந்த திட்டத்தின்படி, சாதாரண பழுதுகள், காரின் அடிப்பாகங்களை ஆய்வு செய்தல், ஆயில் மாற்றுதல், ஆயில் ஃபில்டர் சுத்தம் செய்தல் உள்ளிட்ட வழக்கமான பராமரிப்புப் பணிகளை வீட்டிலேயே மாருதி வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி வாகனங்களுக்கு இந்த நடமாடும் வாகனம் மூலமாக பராமரிப்புப் பணி சேவையை பெற முடியும். இதனால், வாடிக்கையாளர்களின் நேரம் மற்றும் எரிபொருள் விரயம் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வாய்ப்பு கிட்டி இருக்கிறது.

மாருதி சர்வீஸ் ஆன் வீல்ஸ் வாகனத்தில் பழுது நீக்குவதற்கு தேவையான கருவிகள், ஹைட்ராலிக் ஜாக், உதிரிபாகங்கள், காரின் அடிப்பாகத்தை சோதனை செய்வதற்கான உபகரணங்கள் என அனைத்தும் வைக்கப்பட்டு இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் மொபைல் ஆப் அல்லது தொலைபேசி மூலமாக அருகாமையிலுள்ள சர்வீஸ் சென்டரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொண்டால், இந்த சேவையை எளிதாக பெற முடியும். இது மாருதி கார் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையாக அமையும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications