டீசல் கார் உற்பத்தியை மாருதி தொடர்வதற்கு அதிக வாய்ப்பு!
டீசல் கார் உற்பத்தியை தொடர்ந்து செய்தற்கு மாருதிக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி முதல் பாரத் ஸ்டேஜ்- 6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதன் காரணமாக, கார் எஞ்சின்களின் மாசு உமிழ்வை குறைக்கும் விதத்தில் மேம்படுத்தும் முயற்சியில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி தனது பிரபல கார் மாடல்களில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்தி வருகிறது. ஆனால், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் திட்டம் இல்லை என்று ஃபியட் தெரிவித்தது.

இதையடுத்து, 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை சொந்தமாக உருவாக்கி இருக்கிறது சுஸுகி நிறுவனம். அண்மையில் சியாஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புத்தம் புதிய டீசல் எஞ்சின் அடுத்து எர்டிகா காரிலும் வர இருக்கிறது.

இந்த நிலையில், அண்மையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா," அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் டீசல் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கு மிக அதிக முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், டீசல் கார்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இது மாருதி கார் வாடிக்கையாளர்கள் மற்றும் கார் சந்தையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக தேவை இருந்தால், பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில், தற்போது மாருதி கார் விற்பனையில் 23 சதவீதம் அளவுக்கு டீசல் கார்கள் பங்களிப்பை வழங்கி வருகிறது.

அதாவது, எதிர்காலத்தில் டீசல் கார்கள் மீது அதிக கெடுபிடிகளை அரசாங்கம் விதிக்கும் என்ற அச்சம் காரணமாகவே, டீசல் கார்களை வாடிக்கையாளர்கள் ஒதுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக டீசல் எஞ்சின்களை மேம்படுத்தினால், கார் விலையை மிக அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும்.

ஆனால், டீசல் கார்களை விரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே, அந்த குறிப்பிட்ட 20 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் டீசல் கார் விரும்பிகளை மாருதி நிச்சயம் இழக்க விரும்பாது என்று தெரிகிறது.

எனவே, மாருதி கைவசம் உள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. மேலும், இந்த டீசல் எஞ்சினுக்கு தொடர்ந்து வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








