எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற்றாக புது ரூட்டில் பயணிக்க மாருதி திட்டம்!
சிஎன்ஜி எரிவாயுவில் இயங்கும் பிரத்யேக எஞ்சினுடன் கார்களை அறிமுகப்படுத்துவதற்கு மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பெட்ரோல், டீசல் எஞ்சின் வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களை களமிறக்குவதற்கான திட்டங்களில் வாகன நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆனால், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உள்ளிட்ட முக்கிய பாகங்களின் விலை மற்றும் சார்ஜ் ஏற்றுவதற்கான கட்டமைப்பு வசதிகள் பெரும் பின்னடைவாக இருந்து வருகின்றன. வரும் ஆண்டுகளில் இது சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், பெட்ரோல், டீசல், எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற்றாக குறைவான மாசு உமிழ்வு திறன் கொண்ட அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் கார்களை களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளது. தற்போது மாருதி விற்பனை செய்து வரும் சிஎன்ஜி கார்களில் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது.

இந்த எஞ்சின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு எரிபொருளிலும் இயங்கும் திறன் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், முழுக்க முழுக்க சிஎன்ஜி எரிவாயுவில் மட்டுமே இயங்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் எஞ்சினுடன் கார்களை அறிமுகப்படுத்தும் முயற்சியில் மாருதி ஈடுபட்டுள்ளது.

பொதுவாக சிஎன்ஜி வாகனங்களின் செயல்திறன் குறைவாக இருப்பது குறையாக இருக்கிறது. இதனை போக்குவதற்கான முயற்சிகளில் மாருதி ஈடுபட்டுள்ளது. அத்துடன், பெட்ரோல், டீசல் எரிபொருள்களைவிட சிஎன்ஜியின் விலை குறைவு. அதிக எரிபொருள் சிக்கனத்தையும், குறைவான மாசு உமிழ்வையும் கொண்டது.

இந்த நிலையில், மின்சார கார்களுக்கு இருப்பது போன்றே, சிஎன்ஜி கார்களுக்கு ஒரு பெரிய இடர்பாடு உள்ளது. நாட்டின் குறிப்பிட்ட சில நகங்களில் மட்டுமே சிஎன்ஜி எரிபொருள் நிலையங்கள் உள்ளன. இதனால், எலெக்ட்ரிக் கார்களை போலவே சிஎன்ஜி கார்களுக்கான மார்க்கெட் இப்போது குறைவாக இருக்கிறது.

அதேநேரத்தில், சிஎன்ஜி விற்பனை நிலையங்களை அதிக அளவில் ஏற்படுத்தினால், உடனடியாக சிஎன்ஜியில் மட்டுமே இயங்கும் கார்களை களமிறக்க மாருதி வசம் திட்டம் இருக்கிறது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் நாடுமுழுவதும் சிஎன்ஜி எரிபொருள் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 10,000 ஆக அதிகரிக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

எனவே, அடுத்த ஆண்டு இந்த திட்டம் குறித்த இறுதி முடிவை மாருதி எடுக்கும் வாய்ப்புள்ளது. பெட்ரோல்- சிஎன்ஜி கார்கள் விற்பனையில் மாருதி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








