டீசல் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக மாருதி அறிவிப்பு!
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக மாருதி சுஸுகி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி பட்ஜெட் கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. மேலும், நாட்டின் கார் விற்பனையில் 50 சதவீத அளவுக்கு சந்தைப் பங்களிப்பையும் பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்காக, கார் எஞ்சின்களை அனைத்து கார் நிறுவனங்களும் மேம்படுத்தி வருகின்றன. மாருதி நிறுவனம் தனது பலேனோ காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

இதேபோன்று, மாருதி ஆல்ட்டோ 800 காரின் பெட்ரோல் எஞ்சினும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், தனது அனைத்து கார்களின் பெட்ரோல் எஞ்சின்களையும் மேம்படுத்தி அறிமுகம் செய்ய இருக்கிறது மாருதி சுஸுகி.

அதேநேரத்தில், டீசல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்துவதற்கு எந்த திட்டமும் அந்த நிறுவனத்திடம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தற்போது ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பெரும்பான்மையான மாருதி கார்களில் பயன்படுத்தப்படுகிறது.

எனினும், சுஸுகி நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் எர்டிகா காரிலும இந்த டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த சூழலில், டீசல் எஞ்சின் உற்பத்தியை முற்றிலுமாக கைவிடுவதற்கு மாருதி சுஸுகி முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் எஞ்சின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்," பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு மிக அதிக முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது.

அவ்வாறு மேம்படுத்தினாலும், அதன் விலை மிக அதிகமாக நிர்ணயிக்கும் சூழல் எழும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு சரியான தேர்வாக இருக்காது. இதனால், வர்த்தக வாய்ப்பு மிக குறைவாக இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், நடுத்தர விலை கார் மார்க்கெட்டில் டீசல் எஞ்சின் தேர்வுக்கு சந்தை வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும். மேலும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்த வாய்ப்பு உள்ளது," என்று அவர் கூறினார்.

இதனிடையே, டீசல் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், பெட்ரோல் தவிர்த்து, சிஎன்ஜி மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்கும், ஹைப்ரிட் அல்லது மின்சார கார்களை அறிமுகப்படுத்துவதில் மாருதி கவனம் செலுத்த இருக்கிறது.


Click it and Unblock the Notifications