டீசல் கார் விற்பனை இழப்பை தவிர்க்க மாருதி எடுத்த புது முடிவு!
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார் விற்பனையை கைவிடுவதற்கு மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், ஏற்படும் விற்பனை இழப்பை தவிர்ப்பதற்கு அந்நிறுவனம் புது முடிவை எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு டீசல் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதுடன், அதற்கு ஏற்ப விலையேற்றம் செய்தால் வரவேற்பு வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சிறிய வகை டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கு மாருதி சுஸுகி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால், அந்த நிறுவனத்திற்கு அதிக இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இந்த சந்தையை பிடிப்பதற்கு போட்டி கார் நிறுவனங்கள் இப்போதே முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.

இந்த நிலையில், சிறிய டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதன் மூலமாக ஏற்படும் விற்பனை இழப்பை தவிர்ப்பதற்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்கும் கார்களை அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.

இதனை மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா எக்கானமிக் டைம்ஸ் தளத்திற்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு இழைக்காத சிஎன்ஜியில் இயங்கும் வாகனங்களை இயக்குவதற்கு அரசு ஏற்றுக்கொள்ளும். மேலும், நாடு முழுவதும் 10,000 சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையங்களையும் அமைக்க உள்ளது. எனவே, சிஎன்ஜியில் இயங்கும் கார்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்று கூறி இருக்கிறார்.

மாருதி நிறுவனம் தற்போது ஆல்ட்டோ, ஆல்ட்டோ கே10, வேகன் ஆர், செலிரியோ, டிசையர், டூர் எஸ், ஈக்கோ மற்றும் சூப்பர் கேரி மினி டிரக் மாடல்களில் சிஎன்ஜி மாடல்களில் விற்பனை செய்கிறது. இந்த நிலையில், மேலும் சில கார்களிலும் சிஎன்ஜி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தற்போது நாட்டின் வாகன விற்பனையில் சிஎன்ஜி கார்களின் விற்பனை 7 சதவீதமாக உள்ளது. மேலும், சிஎன்ஜி கிடைக்கும் மாநிலங்களில், மாருதி நிறுவனத்தின் ஒவ்வொரு மாடலின் விற்பனையிலும் சிஎன்ஜி மாடலின் விற்பனை 30 சதவீதம் பங்களிப்பை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 31,000 சிஎன்ஜி கார்களை மாருதி விர்பனை செய்துள்ளது. சிஎன்ஜி எரிவாயு நிலையங்கள் அதிகம் உள்ள டெல்லி, மும்பை நகரங்கள் மற்றும் குஜராத் மாநிலத்தில் சிஎன்ஜி கார்களின் விற்பனை அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சிஎன்ஜி கார்களின் உற்பத்தியை 50 சதவீதமாக உயர்த்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. மேலும், அதிக எரிபொருள் சிக்கனம், குறைவான மாசு உமிழ்வு போன்ற சிறப்பம்சங்களால் சிஎன்ஜி கார்களுக்கு அதிக வர்த்தக வாய்ப்பு உருவாகும் என்று மாருதி கருதுகிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








