மாருதி - டொயோட்டா கூட்டணியில் வரும் புத்தம் புதிய எஸ்யூவி, எம்பிவி கார்கள்!
புத்தம் புதிய எஸ்யூவி மற்றும் எம்பிவி கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்குவதற்கு மாருதி - டொயோட்டா கூட்டணி களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மாருதி சுஸுகி - டொயோட்டா இடையிலான கூட்டணி இந்திய மார்க்கெட்டில் வர்த்தக வாய்ப்புள்ள ரகங்களில் புத்தம் புதிய கார் மாடல்களை இணைந்து உருவாக்க முடிவு செய்துள்ளன. இதன்படி, இரு நிறுவனங்களும் சில கார் மாடல்களை ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் இரு பிராண்டுகளிலும் விற்பனை செய்ய முடிவு செய்தன.

இதன்படி, முதல் மாடலாக மாருதி பலேனோ கார் டொயோட்டா பிராண்டில் க்ளான்ஸா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுக்கு ஓரளவு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. இந்த நிலையில், அடுத்ததாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது டொயோட்டா பிராண்டில் ரீபேட்ஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார்கள் ரீபேட்ஜ் எஞ்சினியரிங் முறையில் சிறிய அளவிலான மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த கூட்டணியின் உண்மையான வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், இரண்டு புதிய மாடல்களை களமிறக்க மாருதி - டொயோட்டா முடிவு செய்துள்ளன.

அதாவது, விற்பனையில் சக்கைபோட்டு போட்டு வரும் கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய எஸ்யூவி மாடல்களுக்கு நிகரான ரகத்தில் புத்தம் புதிய எஸ்யூவி மாடலை உருவாக்க இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டு இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா அடிப்படையிலான கட்டமைப்பில் உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது.

அதேபோன்று, புத்தம் புதிய எம்பிவி கார் மாடலையும் இந்த நிறுவனங்கள் உருவாக்க முடிவு செய்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் எம்பிவி கார் மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை கைவசம் வைத்துள்ளன. அதாவது, பட்ஜெட் எம்பிவி கார் ரகத்தில் மாருதி எர்டிகாவும், பிரிமீயம் எம்பிவி ரக மார்க்கெட்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டாவும் முதன்மை வகிக்கின்றன.

இந்த நிலையில், இரு மாடல்களுக்கும் இடையிலான விலையில் புதிய எம்பிவி கார் மாடலை உருவாக்குவதற்கு மாருதி - டொயோட்டா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி மற்றும் எம்பிவி கார் மாடல்கள் சிறிய மாற்றங்கள் என்று இல்லாமல், முற்றிலும் வேறுபட்டதாக மார்க்கெட்டில் நிலைநிறுத்துவதற்கு மாருதி - டொயோட்டா கூட்டணி திட்டமிட்டுள்ளது.

அதாவது, ஒன்றின் சாயல் மற்றொன்றில் பிரதிபலிக்காத வகையில் அதிக டிசைன் மாற்றங்களுடன் இந்த இரண்டு புத்தம் புதிய கார் மாடல்களையும் ஒரே பிளாட்ஃபார்மை பயன்படுத்தி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக, தங்களது வர்த்தகத்தை மிக வலுவாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்புள்ளதாக இரு நிறுவனங்களுமே கருதுகின்றன.

ஏனெனில், ஒரே பிளாட்ஃபார்மை பயன்படுத்தி இந்த இரண்டு புதிய கார் மாடல்களும் உருவாக்கப்படுவதால், முதலீடு வெகுவாக குறையும். மேலும், கார் விலையையும் போட்டியாளர்களுக்கு மிக சவாலாக நிர்ணயிக்க முடியும். இந்த இரு கார்களும் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான விலையில் வர இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








