இந்தியாவில் புதிய விட்டாரா பிரெஸ்ஸா கார் அறிமுகமாகிறது... மாருதி சுஸுகி எடுத்த அதிரடி முடிவு இதுதான்
இந்தியாவில் புதிய விட்டாரா பிரெஸ்ஸா கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) இந்திய மார்க்கெட்டில், கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் விட்டாரா பிரெஸ்ஸா கார் விற்பனை அமோகமாக இருந்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூட 11,785 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் என்ற பெருமையை விட்டாரா பிரெஸ்ஸா தற்போது தன்கைவசம் வைத்துள்ளது. ஆனால் விட்டாரா பிரெஸ்ஸா காரில், மாருதி சுஸுகி நிறுவனம் டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வருகிறது.

இந்த சூழலில் தனது அனைத்து டீசல் கார்களின் உற்பத்தியையும் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தவுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இதற்கு எதிர்வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளே காரணம்.

மிக கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப டீசல் இன்ஜின்களை மேம்படுத்துவதற்கு அதிக செலவு ஆகும் என்பதால்தான் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த முடிவை எடுத்தது. எனவே விட்டாரா பிரெஸ்ஸா காரின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்தது.

ஏனெனில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சூழலில் விட்டாரா பிரெஸ்ஸா காரில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கும் என யூகங்கள் வெளியாகி வந்தன.

தற்போது அந்த யூகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மார்க்கெட்டில் விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதை மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. இது குறித்து கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அனேகமாக 2020ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பாக விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும். புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வேகன் ஆர் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் விட்டாரா பிரெஸ்ஸா காரிலும் வழங்கப்படவுள்ளது.

இந்த இன்ஜின் தற்போதைய நிலையில் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடிய வகையில் உள்ளது. எதிர்வரவுள்ள பிஎஸ்-6 மாசு விதிகளுக்கு ஏற்ப இந்த இன்ஜின் அப்டேட் செய்யப்படவுள்ளது.

அத்துடன் இன்னும் அதிகமான சக்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்த இன்ஜினை மாருதி சுஸுகி ட்யூன் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் காரிலும் இதே டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களைதான் மாருதி சுஸுகி வழங்கும் என தெரிகிறது. அத்துடன் விட்டாரா பிரெஸ்ஸா காரில் கூடுதலாக சில வசதிகள் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பு உபகரணங்களும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் கார், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற இதர காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு சவால் அளிக்கும் தனது பணியை செவ்வனே தொடரும்.


Click it and Unblock the Notifications








