மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கான புதிய எஞ்சின் வாய்ப்புகள்!
டீசல் கார் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக மாருதி அறிவித்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி உயிர் பிழைக்க இருக்கும் வாய்ப்புகளை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி நிறுவனத்தின் விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. மாதத்திற்கு சராசரியாக 12,000 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகின்றன. கடந்த மாதம் கூட 14,000க்கும் மேற்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனையாகின.

எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் விட்டாரா பிரெஸ்ஸா நம்பர்-1 இடத்தில் இருந்து வருகிறது. இந்த சூழலில், அடுத்த ஆண்டு முதல் டீசல் கார் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்த இருப்பதாக மாருதி அறிவித்துள்ளது.

தற்போது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியானது ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்து வருகிறது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளால், இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது.

இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்தப்போவதில்லை என்று ஃபியட் அறிவித்தது. இதையடுத்து, தனது கார்களுக்கு புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை உருவாக்கி பயன்படுத்தத் துவங்கி இருக்கிறது. எனினும், டீசல் கார் உற்பத்தியை அடுத்த ஆண்டு முற்றிலுமாக நிறுத்தப் போவதாக மாருதி அறிவித்துள்ள நிலையில், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவில் புதிய எஞ்சின் ஆப்ஷன்கள் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

மாருதி சியாஸ், எர்டிகா கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியிலும் பயன்படுத்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது. மிக விரைவில் இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் விட்டாரா பிரெஸ்ஸாவில் இடம்பெறும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த எஞ்சினுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டமும் கொடுக்கப்படும். இதனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மைலேஜ் மிகச் சிறப்பானதாக இருக்கும். அதாவது, டீசல் மாடலுக்கு இணையான மைலேஜை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் வரும் ஆகஸ்ட்- செப்டம்பர் காலக்கட்டத்தில் பண்டிகை காலத்தையொட்டி அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

இதுதவிர்த்து, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் தெரிவித்தன. ஆனால், இந்த எஞ்சினை பயன்படுத்துவதை மாருதி தவிர்க்க முடிவு செய்துள்ளது. மற்றொரு ஆப்ஷன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கைவசம் இருக்கிறது.

மாருதி சியாஸ் காரில் பயன்படுத்தப்படும் இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் எர்டிகா காரிலும் வர இருக்கிறது. இந்த டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. அதேநேரத்தில், அடுத்த ஆண்டு முதல் டீசல் எஞ்சின் ஆப்ஷன் இருக்காது என்று மாருதி தெரிவித்துள்ளது.

எனினும், வரவேற்பை பொறுத்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனை வழங்குவது குறித்து மாருதி முடிவு எடுக்கும். எனவே, இந்த டீசல் எஞ்சினை எதிர்காலத்தில் தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று ஆணித்தரமாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications