எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்த வரும் மாருதி வேகன் ஆர்!
கார் மார்க்கெட்டில் புதிய மாருதி வேகன் ஆர் காரின் மின்சார மாடல் புரட்சியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த தசாப்தத்துடன் பெட்ரோல், டீசல் கார்களுக்கான மவுசு படிப்படியாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த தசாப்தம் முதல் பேட்டரியில் இயங்கும் கார்களுக்கான யுகம் துவங்கும் என்பது உறுதியாக கணிக்க முடிகிறது.

இந்த நிலையில், பேட்டரி கார் மார்க்கெட்டில் முன்னதாக களம் புகுந்து தனது சந்தையை வலுவாக்கிக் கொள்வதற்கான முன்னணி கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி, ஒரு பெரும் திட்டத்துடன் மின்சார கார் மார்க்கெட்டில் முன்னிலை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது.

தனது திட்டத்தின்படி, முதல் மாடலாக வேகன் ஆர் காரின் மின்சார மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது மாருதி சுஸுகி. தற்போது 50 வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது.

இந்த சாலை சோதனைகளின் அடிப்படையில் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரில் மேம்படுத்தும் பணிகளிலும் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், மின்சார கார் மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்துவதற்கான பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கும் என்பது தெரிய வருகிறது.

ஆம், புதிய மாருதி வேகன் ஆர் காரை ரூ.7 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் விஷயமாக இருக்கும். மேலும், ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் அதிகம் விரும்பப்படும் மாடலாகவும் இருப்பது இந்த காருக்கு மிகப்பெரிய பலம்.

விலை குறைவு என்பதுடன், இந்த காருக்கு குயிக் சார்ஜரையும் மாருதி நிறுவனம் வழங்க இருக்கிறது. இந்த குயிக் சார்ஜர் மூலமாக வெறும் ஒரு மணிநேரத்திற்கு உள்ளாக காரின் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்றி விட முடியும். இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு நலம் பயக்கும் விஷயமாக இருக்கும்.
புதிய மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரில் 72 வோல்ட் திறன் கொண்ட 25 kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மூலமாக 150 கிமீ தூரம் வரை பயணிக்கும் வசதியை வழங்கும். நகர்ப்புறத்தில் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

நீண்ட தூர பயணங்களின்போது கூட குயிக் சார்ஜர் வசதி மூலமாக பயணத்தை அமைத்துக் கொள்வதற்கும் சாதகத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை மிக விரைவாக மேற்கொள்ளும்போது நிச்சயம் இந்த கார் பெரிய வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அதாவது, பெருநகரங்கள் மட்டுமல்லாது, சிறிய நகரங்களில் கூட மாருதி நிறுவனத்தின் சர்வீஸ் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்போது, நீண்ட தூர பயணங்களைகூட எளிதாக செய்வதற்கான வாய்ப்பை இந்த மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் தரும்.

வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று, உற்பத்தி அதிகரித்தால், காரின் விலையும் குறைவதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த கார் மத்திய அரசின் ஃபேம் மானிய திட்டத்தின் கீழ் விற்பனைக்கு வர இருப்பதால் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு பெரிய பயன் கிடைக்கும்.
Source: ACI


Click it and Unblock the Notifications








