வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்... ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட மாருதி!
மாருதி வேகன் ஆர் கார் நகர்ப்புற பயன்பாட்டுக்கான சிறந்த பட்ஜெட் கார் மாடலாக பெயர் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு மாருதி வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், 50 மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார்கள் சாலை சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு இருப்பது தெரிந்த விஷயம்தான்.

இந்த நிலையில், சிஎன்பிசிடிவி18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பர்கவா மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் அறிமுகம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அந்த தகவல் மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது.

ஆம், மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் முதல் கட்டமாக ஓலா, உபர் மற்றும் அரசுத் துறை பயன்பாட்டிற்கு மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனிநபர் பயன்பாட்டுக்கான சந்தையில் இப்போதைக்கு அறிமுகம் செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," மாருதி வேகன் ஆர் கார் எலெக்ட்ரிக் மாடல் முதல்கட்டமாக டாக்சி ஆபரேட்டர்கள் மற்றும் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவோருக்கு மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி விலை மிக அதிகம். மேலும், ரூ.10 லட்சத்திற்குள் மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை களமிறக்குவது சாத்தியமில்லாத நிலை உள்ளது. எனவே, இது தனிநபர் பயன்பாட்டுக்கு உகந்த விலையில் தர இயலாத நிலை உள்ளது.

அதேபோன்று, இந்த காரின் பேட்டரியின் திறன் நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவாக இருக்காது என்பதால், முதல்கட்டமாக வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கும், அரசுத் துறை பயன்பாட்டிற்கும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

இதனால், மாருதி வேகன் ஆர் காரின் எலெக்ட்ரிக் மாடல் உடனடியாக தனிநபர் சந்தையை குறிவைத்து விற்பனைக்கு வராது என்றே தெரிகிறது. மாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் 200 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை வழங்கும். எனவே, நகர்ப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே உகந்ததாக இருக்கும்.

இதற்கு மாற்றாக, சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கி இருக்கிறது மாருதி நிறுவனம். மாருதி ஆல்ட்டோ, வேகன் ஆர், டிசையர் மற்றும் எர்டிகா கார்களில் சிஎன்ஜி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தனது பிற கார் மாடல்களிலும் சிஎன்ஜி தேர்வை வழங்குவதற்கான முயற்சிகளில் மாருதி கார் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால், இதில் உள்ள சிக்கல், அனைத்து நகரங்களிலும் சிஎன்ஜி எரிபொருள் நிலையங்கள் இல்லை என்பது பாதகமான விஷயமாக இருக்கிறது.

அடுத்த ஆண்டு புதிய மாசு விதிகளுக்கு பின்னர் டீசல் கார்கள் விற்பனையை முற்றிலுமாக நிறுத்த மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பை சரிகட்டும் விதமாக, சிஎன்ஜி கார்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் மாருதி சுஸுகி ஈடுபட உள்ளது.
Source: CNBC TV18


Click it and Unblock the Notifications