காரை கழுவ குடிநீரை பயன்படுத்திய பிரபல கிரிக்கெட் வீரர்: பாரபட்சமின்றி அபராதம் விதித்த அதிகாரிகள்...
நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சூழ்நிலையில், குடிநீரைக் கொண்டு தனது லக்சூரி காரை கழுவியதாக இந்திய அணியின் புகழ்வாய்ந்த கிரிக்கெட் வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் தண்ணீர் பஞ்சத்தால் வாடி வரும்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், தனது லக்சூரி காரை குடி தண்ணீரைப் பயன்படுத்தி கழுவியுள்ளார். அவர் வேறுயாருமில்லை, நமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லிதான். இந்த சம்பவத்திற்காக, அவருக்கு அதிகாரிகள் அபராதம் வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த, வீடியோவை ஏஎன்ஐ ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கோடைக்காலம் துவங்கிவிட்டாலே, அதன் கூடவே அழையா விருந்தாளியாக தண்ணீர் பிரச்னையும் ஆரம்பித்துவிடும். இந்த பிரச்னை தமிழகம் மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கக்கூடிய முக்கிய பிரச்னையாக இருக்கின்றது.
அதிலும், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது குடிநீர் பிரச்னை, பூதகரமாக வெடித்துள்ளது. இதனால், நாட்டின் அனைத்து மாநிலங்களுமே தண்ணீருக்காக தவித்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு, தண்ணீர் பிரச்னை தற்போது இந்தியா முழுவதும் தலைவிரித்துக்கொண்டு ஆடிக்கொண்டுள்ளது.

இதற்கு அரசியல் உட்பட பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. அதேசமயம், நீர் நிலைகளை சரிவர தூர்வாறாமல், பாதுகாக்காமல் விட்டதும் இதற்கு முக்கியமாக காரணமாக இருக்கின்றன. இதனாலயே, பல நீர்நிலைகள் தற்போது, காய்ந்து குப்பை மேடுகளாக காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதி மக்கள் நிலத்தடி நீரையே தங்களின் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தி வருகின்றனர்.

சில பகுதிகளில் இதுகூட கிடைக்காமல், பிற பகுதிகளையும், தண்ணீர் லாரிகளையும் தங்களின் அன்றாட தேவைக்கான நீருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு, நாடே குடி தண்ணீர் பிர்சனையில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், விராட் கோஹ்லியின் சொகுசு காரை கழுவ குடிநீர் பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோஹ்லி ஓர் கார் பிரியர் என்பது நாம், அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில், விராட்டின் கராஜில் பல லக்சூரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களின் அணி வகுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிட்டிருந்தது. அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும். அதிலும், அவரிடத்தில் ஆடி நிறுவனத்தின் கார்களே அதிகமாக இருக்கின்றன.

அந்தவகையில், விராட்டிடம், பிஎம்டபிள்யூ 7 செரீஸ், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக், ஆடி எஸ்5, ஆடி ஆர்எஸ்5, ஆடி ஆர்8, ஆடி ஏ8எல் உள்ளிட்ட பல்வேறு கார்கள் உள்ளன. இதில், ஓர் லக்சூரி காரை சாலையில் வைத்து கழுவிய குற்றத்திற்காக தான் விராட்டின் பணியாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில்தான் விராட் கோஹ்லி வசித்து வருகிறார். இங்கு தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விராட்டின் பணியாளர் ஒருவர் அவரது காரை கழுவதற்கும், வீட்டுன் முகப்பு பகுதியை சுத்தம் செய்வதற்காகவும் குடிநீரைப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கையை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, குருகிராம் பகுதி நகராட்சி அதிகாரி யஸ்பல் யாதவ் கூறியதாவது, "தற்போது கோடை காலம் நிலவி வருவாதல், தண்ணீர் பஞ்சம் நாடு முழுவதும் அதிகமாக நிலவி வருகின்றது. இதனால், பெரும்பாலான மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோஹ்லியின் வீட்டில், குடிநீர் வீணாக்குவதாக புகார் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, தண்ணீரை வீணாக்கிய அவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், "இவ்வாறு முறைகேட்டில் ஈடுபடும் தனி நபருக்கு தற்போது ரூ. 1,000 ஆயிரமும், நிறுவனங்களுக்கு ரூ. 5,000 ஆயிரமும், அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற, விஷயங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள பறக்கும் படை ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

விராட் கோஹ்லி, தான் குடிப்பதற்காக ரூ. 600 மதிப்புள்ள குடிநீரைப் பயன்படுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்த அதிர்ச்சியில் இருந்தே அவரது ரசிகர்கள் மீளாத நிலையில், புதிய சிக்கலாக குடிநீரை சொகுசு கார்களை சுத்தம் செய்ய பயன்படுத்தியது, மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








