3 மணிநேரத்தில் கார் சர்வீஸ் செய்யும் புதிய திட்டம்... மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம்!
மூன்று மணிநேரத்தில் கார் சர்வீஸ் செய்து தரும் திட்டத்தை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முதலிடத்தில் இருந்து வருகிறது. சிறந்த கார் மாடல்கள் மட்டுமில்லாமல், வாடிக்கையாளர் சேவையிலும் இந்தியர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை தரத்தையும், வசதிகளையும் மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அந்த வகையில், மிக விரைவாக கார் சர்வீஸ் செய்து தரும் திட்டத்தை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. பிரிமீயர் எக்ஸ்பிரஸ் சர்வீஸ் என்ற பெயரில் இந்த விரைவு சர்வீஸ் திட்டம் அழைக்கப்படுகிறது.

முதல்கட்டமாக பெங்களூரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. பெங்களூரில் உள்ள அனைத்து மெர்சிடிஸ் பென்ஸ் சர்வீஸ் மையங்களிலும் இதற்காக பிரத்யேக கார் சர்வீஸ் பே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று, டெல்லி, மும்பை, ஆமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த பிரத்யேக எக்ஸ்பிரஸ் சர்வீஸ் திட்டத்திற்காக ஒவ்வொரு சர்வீஸ் மையத்திலும் பயிற்சி பெற்ற மூன்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் குறித்த நேரத்தில் கார் சர்வீஸ் செய்து கொடுத்துவிடுவர் என்றும் மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

கார் சர்வீஸ் செய்து தரும் பணியில் மூன்று பேர் அடங்கிய குழுவில் ஒரு குழுத் தலைவரும், இரண்டு சர்வீஸ் டெக்னிஷியன்களும் இடம்பெற்றிருப்பர். இவர்கள் காரில் இருக்கும் குறைகளை மிக விரைவாக கண்டறிந்து சரிசெய்து தருவதற்கான பணிகளை ஏற்றுக் கொள்வர்.

இந்த திட்டம் டைப் ஏ மற்றும் டைப் பி என இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது. டைப் ஏ சர்வீஸ் திட்டத்தில் ஆயில், ஆயில் ஃபில்டர், பிரேக் திரவம், தூசு வடிகட்டியை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். அத்துடன், டயர்களை மாற்றுதல், கூலண்ட் கலவையின் தன்மை சரியாக இருக்கிறதா, கார் கழுவி சுத்தப்படுத்திக் கொடுக்கும் பணிகள் செய்து தரப்படும்.

டைப் பி திட்டத்தின் கீழ் ஆயில், ஆயில் ஃபில்டர், பிரேக் திரவம், தூசு வடிகட்டி மாற்றித் தரும் பணிகள் செய்யப்படும். கூலண்ட் பரிசோதனை, கார் கழுவி சுத்தப்படுத்துதல் தவிர்த்து, டிஸ்க் பிரேக் சுத்தம் செய்வது, வீல் பேன்சிங், டீசல் வடிகட்டி பரிசோதனை ஆகியவை கூடுதலாக செய்து தரப்படும். இந்த திட்டத்தின் கீழ் பெரிய அளவிலான பழுது நீக்கு பணிகளை செய்ய இயலாது.

வழக்கமான பராமரிப்பு பணிகள் மூன்று மணிநேரத்திற்குள் செய்து கார் டெலிவிரி கொடுக்கப்படும். மூன்று மணிநேரத்திற்குள் கார் சர்வீஸ் செய்து கொடுக்கப்படாவிட்டால், கட்டணம் வசூலிக்கப்படாது என்று மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








