இந்தியா வரும் எம்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி!
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி பொது பார்வைக்கு முறைப்படி கொண்டு வரப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் தனது முதல் கார் மாடலாக ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அட்டகாசமான ஸ்டைல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், இரண்டாவது மாடலாக பேட்டரியில் இயங்கும் மின்சார எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. எம்ஜி இ-இசட்எஸ் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி அண்மையில்தான் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு செல்ல இருக்கிறது.

இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்த புதிய எஸ்யூவியில் 150 எச்பி பவரை அளிக்கும் மின் மோட்டார் மற்றும் அதற்கு போதிய மின் திறனை வழங்கும் பேட்டரியும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த புதிய மின்சார எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 335 கிமீ தூரம் பயணிக்க முடியும்.

புதிய எம்ஜி இ-இசட்எஸ் மின்சார எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கு செயிக் குழுமம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, விலையை மிக சவாலாக நிர்ணயித்து சந்தையை பிடிக்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும், எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் விற்பனையை வலுப்படுத்துவதற்காக போதிய விற்பனையகங்களை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஓர் ஆண்டிற்குள் 120 விற்பனையகங்களையும், சர்வீஸ் மையங்களையும் இந்தியாவில் நிறுவுவதற்கும் திட்டமிட்டுள்ளது.

இதனால், புதிய எம்ஜி இ-இசட்எஸ் எஸ்யூவியின் விற்பனைக்கு பக்கபலமாக இருக்கும். எனினும், குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இந்த புதிய மின்சார எஸ்யூவி மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது எம்ஜி மோட்டார்ஸ்.


Click it and Unblock the Notifications








