அப்படிப்போடு... எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு மீண்டும் தொடங்குகிறது... எப்போது தெரியுமா?
எம்ஜி ஹெக்டர் காருக்கான முன்பதிவு மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம், மிட்-சைஸ் எஸ்யூவி ரக காரான ஹெக்டரை கடந்த ஜூன் 27ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எம்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியுள்ள முதல் கார் இதுதான். டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக எம்ஜி ஹெக்டர் களமிறங்கியுள்ளது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் களம் கண்டுள்ள எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர். எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காரின் சவாலான விலை நிர்ணயமும், வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் ஆதரவுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

புக்கிங் தொடங்கிய ஒரு மாதத்திற்கு உள்ளாகவே எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் காருக்கு 10,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்று விட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஹலோல் ஆலையில்தான் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆனால் அந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஒரு மாதத்திற்கு வெறும் 2,000 யூனிட்கள் மட்டுமே.

ஆனால் அதற்கு நேர் மாறாக முன்பதிவுகள் குவிந்து வந்தன. எனவே காத்திருப்பு காலம் நீள்வதை தவிர்க்கும் பொருட்டு, ஹெக்டர் காருக்கான முன்பதிவுகளை எம்ஜி நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி விட்டது. ஹெக்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மாடலுக்கான புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

புக்கிங் நிறுத்தப்படுவதற்கு முன்னதாக எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவி காருக்கு 21,000 முன்பதிவுகளை பெற்றிருந்தது. ஆனால் புக்கிங் நிறுத்தப்பட்டதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர். புக்கிங்கை மீண்டும் தொடங்க எம்ஜி மோட்டார் நிறுவனம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலை தளங்களின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட எம்ஜி நிறுவனம் தரத்தில் எவ்விதமான சமரசமும் செய்து கொள்ளாமல், ஹலோல் ஆலையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அத்துடன் ஏற்கனவே புக்கிங் செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கு முடிந்த அளவிற்கு மிக வேகமாக ஹெக்டர் கார்களை டெலிவரி செய்யும் பணிகளிலும் ஈடுபட்டது.

இந்த சூழலில் ஹெக்டர் காருக்கான முன்பதிவு மீண்டும் தொடங்கப்படும் தேதிக்காக காத்திருப்பவர்களுக்கு தற்போது மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், ஹெக்டர் காருக்கான முன்பதிவுகளை எம்ஜி மோட்டார் நிறுவனம் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அடுத்த மாதம் முதல் ஹலோல் ஆலையில் ஹெக்டர் காரின் உற்பத்தியை ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் யூனிட்களாக அதிகரிக்கவும் எம்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வெயிட்டிங் பீரியட்டை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு காரை விரைவாக டெலிவரி செய்ய முடியும்.

எம்ஜி ஹெக்டர் காரின் டாப்-2 வேரியண்ட்களான ஷார்ப் மற்றும் ஸ்மார்ட் ஆகிய வேரியண்ட்களுக்குதான் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது. மொத்த முன்பதிவுகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான புக்கிங்குகளை இந்த வேரியண்ட்கள்தான் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








