2.4 டன் டி90 எஸ்யூவிக்கு இந்த எஞ்சின் போதாது... பவர்ஃபுல் டீசல் எஞ்சினை அறிமுகப்படுத்தும் எம்ஜி!
பிரம்மாண்டமான புதிய டி-90 எஸ்யூவியில் அதிக செயல்திறன் மிக்க புத்தம் புதிய டீசல் எஞ்சினை பொருத்தி இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருவது தெரிந்ததே. செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பவ்ஜுன் பிராண்டு மாடல்தான் இந்தியாவில் ஹெக்டர் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஹெக்டருக்கு கிடைத்த வரவேற்பு செயிக் குழுமத்திற்கு அதிக உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், எம்ஜி பிராண்டில் இசட்எஸ் எலெக்ட்ரிக் கார், 6 சீட்டர் ஹெக்டர் எஸ்யூவிகள் வருவது ஏற்கனவே உறுதியான விஷயம்தான். இது மட்டுமல்லாமல், சீனாவில் விற்பனை செய்யப்படும் டி-90 எஸ்யூவியையும் இந்தியாவில் எம்ஜி மோட்டார்ஸ் மூலமாக விற்பனை செய்வதற்கான திட்டமும் செயிக் குழுமத்திடம் உள்ளது.

புதிய டி-90 கார் முழுமையான எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்தநிலையில், டி-90 எஸ்யூவியானது வெளிநாடுகளில் 224 எச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் கிடைக்கிறது.

இந்தநிலையில், இந்தியாவில் டீசல் மாடலிலும் அறிமுகப்படுத்த செயிக் குழுமம் விரும்புகிறது. ஹெக்டர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது. இந்த எஞ்சின் 170 எச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

ஆனால், 2.4 டன் எடையுடைய டி-90 எஸ்யூவிக்கு இந்த திறன் போதாது என்று செயிக் கருதுகிறது. எனவே, சொந்த தயாரிப்பில் உருவான 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சினுடன் டி-90 எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. இதே எஞ்சின் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 218 எச்பி பவரையும், 480 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சின் அண்மையில் சீனாவில் நடந்த குவாங்ஸோ மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், இந்த எஞ்சின் ஃபியட் நிறுவனத்தின் மல்டிஜெட்-2 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

புதிய டி-90 எஸ்யூவி ரூ.27 லட்சம் முதல் ரூ.35 லட்சம் இடையிலான விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. மிக ஆளுமையான இந்த எஸ்யூவியானது அடுத்த ஆண்டு பிற்பாதியில் அல்லது 2021ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இது நிச்சயம் போட்டியாளர்களை அலற விடும் என்று நம்பலாம்.
Source: ACI


Click it and Unblock the Notifications








