ரூ.10 லட்சத்திற்குள்சிறிய மின்சார கார் களமிறக்க எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்!
ரூ.10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் சிறிய ரக மின்சார கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவின் செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. விரைவில் ஹெக்டர் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்க உள்ளது. வரும் 4ந் தேதி ஹெக்டர் எஸ்யூவிக்கான முன்பதிவும் துவங்க இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் மிக திடமான வர்த்தக கொள்கைகளுடன் முக்கிய இடத்தை பிடிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, ரூ.10 லட்சத்திற்குள் புதிய மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

அதாவது, உள்ளூர் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களே இந்த பட்ஜெட்டில் மின்சார கார்களை அறிமுகம் செய்வதற்கு பல சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி திட்டம் அனைத்து போட்டியாளர்களுக்கும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த 18 முதல் 24 மாதங்களில் 5 புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எம்ஜி மோட்டார்ஸ். அதில் இஇசட்எஸ் என்ற மின்சார எஸ்யூவி மாடலும் ஒன்று. இதுதவிர்த்து, சிறிய ரக மின்சார காரையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது, இஇசட்எஸ் எஸ்யூவிக்கு அடுத்து இரண்டாவது மாடலானது ரூ.10 லட்சத்திற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக எம்ஜி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவில் விற்பனையாகும் பவ்ஜுன் இ100 என்ற எலெக்ட்ரிக் கார் மாடல் எம்ஜி பிராண்டில் ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த கார் ஏற்கனவே இந்தியாவில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மொத்தம் மூன்று கட்டங்களாக இந்தியாவில் தனது பிராண்டை வலுப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக எம்ஜி பிராண்டை இந்தியாவில் நிலைநிறுத்துவதற்கும், மதிப்பு வாய்ந்த பிராண்டாக மாற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்லது.

அடுத்து உற்பத்தி திறனை அதிகரிக்கவும், பல புதிய மாடல்களை கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது. இறுதியாக நிறுவனத்தை லாபகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








