எம்ஜி ஹெக்டருக்காக தவம் கிடப்பவர்களுக்கு ஓர் குட் நியூஸ்!
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியை வாங்குவதற்காக தவம் கிடக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் மாடலாக வந்த ஹெக்டர் எஸ்யூவிக்கு எதிர்பாராத வகையில் எகிடுதகிடான வரவேற்பு கிடைத்தது. இதனால், திக்குமுக்காடி போன எம்ஜி மோட்டார்ஸ் புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை தீவிரமாக இறங்கியது. இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் இருந்து எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு மீண்டும் முன்பதிவு துவங்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே எம்ஜி ஹெக்டருக்கு முன்பதிவு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதுவரை 40,000 பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், முன்பதிவு மீண்டும் உயர்ந்து வருவதால், ஹெக்டர் எஸ்யூவிக்கான காத்திருப்பு காலம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக, ஹெக்டர் உற்பத்தியை நவம்பர் முதல் அதிகரிக்க எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஆரம்பத்தில் 2,000 யூனிட்டுகள் என்ற இலக்குடன் உற்பத்தி துவங்கப்பட்ட ஹெக்டர் எஸ்யூவிக்கு செப்டம்பரில் 3,000 யூனிட்டுகள் என்ற அளவிற்கு உற்பத்தி உயர்த்தப்பட்டது. அடுத்த மாதத்தில் இருந்து மாதத்திற்கு 3,500 யூனிட்டுகள் என்ற அளவிற்கு உற்பத்தி அதிகரிக்கப்பட உள்ளது. இதன்மூலமாக, புதிதாக 500 தொழிலாளர்களை குஜராத் ஆலையில் பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரூ.12.18 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த மாதம் 2.5 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. எனினும், விலை அதிகரிக்கப்பட்டாலும் மதிப்பு வாய்ந்த மாடலாக இருப்பதால் ஹெக்டர் எஸ்யூவியை வாங்குவதற்கான ஆர்வம் வாடிக்கையாளர் மத்தியில் குறைந்தபாடில்லை.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் வசீகரமான தோற்றம், அதிக இடவசதி மற்றும் இன்டர்நெட் வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டன. விலையும் மிக சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விற்பனையில் கலக்கி வருகிறது.

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலானது ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலிலும் வருகிறது. இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்த காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








