விற்பனையில் புதிய உச்சத்தை பதிவு செய்த எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி!
அக்டோபர் மாதத்திலும் விற்பனையில் தொடர்ந்து சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தி உள்ளது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி.

கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசைன், இடவசதி, தொழில்நுட்ப அம்சங்கள் என அனைத்திலும் சிறப்பானதாகவும், விலையும் சரியாக இருப்பதால் விற்பனையிலும் அசத்தி வருகிறது.

முதல்கட்டமாக 21,000 முன்பதிவுகளை குவித்தது. இதையடுத்து, முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29ந் தேதி மீண்டும் முன்பதிவு துவங்கப்பட்டது. தற்போது 38,000 முன்பதிவுகளை இந்த கார் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், கடந்த மாதம் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் விற்பனை புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஆம். கடந்த மாதம் 3,536 ஹெக்டர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக வந்த தந்திராஸ் பண்டிகை தினத்தன்று மட்டும் 700 ஹெக்டர் எஸ்யூவிகள் டெலிவிரி கொடுக்கப்பட்டன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் ராகேஷ் சிதனா,"இந்திய வாடிக்கையாளர்களின் நெஞ்சங்களை ஹெக்டர் எஸ்யூவி வென்றுவிட்டது. வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான சேவையை வழங்குவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அதேபோன்று, உற்பத்தியையும் அதிகரித்து வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் பிரம்மாண்ட தோற்றம் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அத்துடன், இந்த காரில் 10.4 அங்குல எச்டி தொடுதிரையுடன் கூடிய ஐ-ஸ்மார்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். அத்துடன், வாய்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகளையும் வழங்குகிறது. இந்த காரின் மிக முக்கிய தொழில்நுட்ப அம்சம், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேரடி இணைய வசதியை அளிக்கும் வகையில் சிம் கார்டு கொடுக்கப்படுகிறது.

இதன்மூலமாக, ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பல்வேறு தகவல்களை எளிதாக பெறும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன், இந்த சாதனத்தின் சாஃப்ட்வேரை எம்ஜி மோட்டார் நிறுவனம் ரிமோட் முறையில் அப்டேட் செய்யும் வசதியும் இருக்கிறது. அவ்வாறு அண்மையில் கூட ஒரு அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தில் இருக்கும் சிம் கார்டு 5ஜி இணைய தொழில்நுட்பத்தையும் சப்போர்ட் செய்யும் என்று முக்கிய விஷயமாக கூறலாம். பொழுதுபோக்கு வசதி, காரின் இயக்கம் குறித்த தகவல்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் மூலமாக ரிமோட் முறையில் கட்டுப்படுத்தும் வசதிகளை பெறுவதற்கு இந்த இணைய வசதி பெரிதும் உதவும்.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினஅ அதிகபட்சமாக 143 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். ஹைப்ரிட் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லை.

எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியானு ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அரோரா சில்வர், கேண்டி ஒயிட், ஸ்டாரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் கலர்டு க்ளேஸ் ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகள் உள்ளன.

புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி ரூ.12.48 லட்சம் முதல் ரூ.17.28 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் ரகம் மற்றும் விலை அடிப்படையில் போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications








