குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார்... எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்!
பட்ஜெட் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், விலை குறைவான புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தனது கீழ் செயல்படும் பவ்ஜுன் நிறுவனத்தின் எஸ்யூவி மாடலை ஹெக்டர் என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்து இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. முதல் கார் மாடலுக்கே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த உற்சாகத்துடன் அடுத்ததாக இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் ஹூண்டாய் கோனா காருக்கு நேரடி போட்டியாக வர இருக்கிறது. ஜனவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

எம்ஜி இ-இசட்எஸ் காரில் 44kWh லித்தியம் அயான் பேட்டரியுடன் வர இருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 350 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இ-இசட்எஸ் கார் விலை அதிகமாக நிர்ணயிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இது அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவரும் வாய்ப்பில்லை. எனினும், எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை வலுப்பெற துவங்கி இருக்கும் நிலையில், வரும் ஆண்டுகளில் வரவேற்பு கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது.

இதனை மனதில் வைத்து குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த கார் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற விதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் இந்த புதிய கார் எதிர்பார்க்கலாம். அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. மேலும், எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலையை இந்தியாவில் துவங்குவதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.5,000 கோடி முதலீட்டுத் திட்டத்தை எம்ஜி அறிவித்துள்ளது. இதனிடையே, எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தயாரிப்புக்காக கூடுதல் முதலீடுகளையும் இந்தியாவில் செய்வதற்கு எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








