இந்தியாவில் புதிதாக ரூ.3,000 கோடி முதலீடு செய்கிறது எம்ஜி கார் நிறுவனம்
இந்தியாவில் புதிதாக ரூ.3,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக எம்ஜி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனாவை சேர்ந்த செயிக் வாகன குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் ஹெக்டர் என்ற முதல் கார் மாடலுடன் இந்தியாவில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தகத்தை துவங்கியது.

இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் என்ற பெருமையுடன் வந்த ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், உற்சாகமடைந்துள்ள எம்ஜி நிறுவனம் இசட்எஸ் எலெக்ட்ரிக் காரையும், ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடலையும் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்தநிலையில், இந்தியாவில் புதிதாக ரூ.3,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக எம்ஜி மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எம்ஜி மோட்டார்ஸ் தலைமை வர்த்தக அதிகாரி கவுரவ் குப்தா கூறுகையில்," இந்தியாவில் நீண்ட கால வர்த்தக திட்டத்துடன் எம்ஜி மோட்டார்ஸ் செயலாற்றி வருகிறது.

இதுவரை ரூ.2,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்துள்ளோம். புதிய மாடல்களுக்காக மேலும் ரூ.3,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். விரைவில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறோம். வரும் 2021ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் இந்தியாவில் 4 கார் மாடல்களை கைவசம் வைத்திருப்போம்," என்று தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஹலோல் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆலையை செயிக் குழுமம் கையகப்படுத்தியது. இந்த ஆலையில்தான் எம்ஜி ஹெக்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் வரும் இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் உள்ளிட்ட புதிய மாடல்களுக்காகவும், வர்த்தக விரிவாக்கப் பணிகளுக்காகவும் இந்த புதிய முதலீடு பயன்படுத்தப்படும்.

குறிப்பாக, புதிய மாடல்களின் விற்பனைக்கு ஏதுவாக டீலர் நெட்வொர்க்கை வலுவாக மாற்றுவதற்கும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும். வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் சர்வீஸ் மையங்களுடன் கூடிய 250 டீலர்களை வைத்திருக்கும் திட்டத்துடன் எம்ஜி செயலாற்றி வருகிறது.

நாட்டின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, அதிக வர்த்தக வாய்ப்புள்ள இரண்டாம் நிலை நகரங்களிலும் ஷோரூம்களை திறப்பதற்கான திட்டங்களை அந்நிறுவனம் கையில் எடுத்திருக்கிறது. இதன்மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்க முடியும் என்று நம்புகிறது.


Click it and Unblock the Notifications








