இந்த காருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம்... கேரள மாநில அதிகாரிகள் அதிரடி காட்டியது இதற்குதான்...
கேரளாவில் மினி கூப்பர் எஸ் காருக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேரள மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கல்லூர் பகுதியில், சமீபத்தில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விலை உயர்ந்த மினி கூப்பர் எஸ் (Mini Cooper S) கார் ஒன்று அதிவேகத்தில் வந்தது. இதனை கவனித்த அதிகாரிகள், அந்த காரை நிறுத்தினர். அப்போது அந்த கார் ஜார்கண்ட் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அத்துடன் அதில் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட்டும் பொருத்தப்பட்டிருந்தது. விதிமுறைகள் படி இது தவறு.

இதன் காரணமாக மினி கூப்பர் எஸ் காரை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர். அத்துடன் அந்த காருக்கு 4.9 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து இ-வர்தா செய்தி வெளியிட்டுள்ளது. என்றாலும் அந்த காரின் உரிமையாளர் அபராதத்தை செலுத்தி விட்டார். இதன் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட கார் மீண்டும் அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது. வெளி மாநில பதிவு எண் விவகாரத்திற்காக மட்டும் அபராதம் விதிக்கப்பட்டதா? அல்லது ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் பயன்படுத்தியதற்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டதா? என்ற தகவல் தெளிவாக தெரியவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, வெளி மாநிலங்களில் சொகுசு கார்கள் பதிவு செய்யப்படும் விவகாரம் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது பிரபல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் மீதும் புகார் எழுந்தது. இதில், நடிகர்கள் சுரேஷ் கோபி, பஹத் பாசில் மற்றும் நடிகை அமலாபால் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

கேரள மாநிலத்தில் வாகனங்களை பதிவு செய்வதற்கான வரி மிக அதிகமாக உள்ளது. எனவே வெளி மாநிலங்களில் பதிவு செய்தால், வாகனத்தின் பதிவிற்காக செலுத்தும் வரி தொகையில் பெரும் பகுதியை ஒருவர் மிச்சம் பிடிக்க முடியும். இதன் காரணமாகதான் வாகனங்களை பதிவு செய்வதற்காக வரி குறைவாக உள்ள வெளி மாநிலங்களை தேர்வு செய்கின்றனர்.

பொதுவாக கேரள மாநிலத்தை பொறுத்தவரை பலரும் தேர்வு செய்வது புதுச்சேரிதான். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வாகனங்களை பதிவு செய்வதற்கான வரி மிக மிக குறைவு. மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை கேரளாவில் பதிவு செய்தால், அதற்கு ஏற்ப பல லட்சங்களை வரியாக செலுத்த வேண்டியதிருக்கும். இதுவே புதுச்சேரி என்றால் பல லட்சங்கள் மிச்சம் ஆகும்.

இப்படி வெளி மாநில பதிவை நாடி சென்றுதான் கேரளாவின் பிரபலங்கள் பலரும் போலீஸ் பிடியில் சிக்கினர். வசிப்பது கேரளாவில். வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதும் கேரளாவில்தான். ஆனால் புதுச்சேரியில் வசிப்பதை போல் போலியான ஆவணங்களை கொடுத்து வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் காரணமாக வரி மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்படுவதால், வெளி மாநில பதிவிற்கு எதிரான நடவடிக்கைகளை கேரள அரசு முடுக்கி விட்டுள்ளது.

கேரளா மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த பிரச்னை நிலவி வருகிறது. விலை உயர்ந்த லக்ஸரி வாகனங்களை வாங்குபவர்கள் அவற்றை வரி குறைவாக உள்ள அண்டை மாநிலங்களில் பதிவு செய்கின்றனர். நாடு முழுக்க ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்துவது ஒன்றே இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். ஆனால் அப்படி ஒரே சீரான வரி விதிப்பு இந்தியாவில் நிஜமாக இன்னும் நீண்ட நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








