கியர் லிவருக்கு பதில் மூங்கில் குச்சி... தனியார் பள்ளி பஸ்களின் லட்சணத்தை தோலுரித்து காட்டிய வீடியோ
கியர் லிவருக்கு பதிலாக மூங்கில் குச்சியை பொருத்தி தனியார் பள்ளி பஸ் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மும்பையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 22 வயது மட்டுமே ஆகிறது. இன்று காலை (பிப்.7) வழக்கம்போல ராஜ்குமார் பள்ளி பஸ்ஸை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பஸ் எதிர்பாராதவிதமாக தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான பிஎம்டபிள்யூ கார் ஒன்றின் மீது மோதியது. ஆனால் விபத்து நடந்ததும், ராஜ்குமார் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த காரின் உரிமையாளர் பஸ்ஸை விரட்டினார்.

சிறிது தூரம் விரட்டி சென்றபின் அவர் ஒருவழியாக பஸ்ஸை நிறுத்தி விட்டார். பின்னர் விபத்து தொடர்பாக தனியார் பள்ளி பஸ் டிரைவர் ராஜ்குமாருக்கும், பிஎம்டபிள்யூ காரின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பஸ்ஸில் கியர் லிவருக்கு (Gear Lever) பதிலாக மூங்கில் குச்சியை சொருகி வைத்திருப்பதை கண்டு பிஎம்டபிள்யூ கார் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். எனவே இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

மும்பையில் உள்ள கார் (Khar) என்ற பகுதியில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. எனவே போலீசார் உடனே அங்கு விரைந்து சென்றார். அப்போது கியர் லிவருக்கு பதிலாக மூங்கில் குச்சியை பொருத்தி பஸ் இயக்கப்பட்டு வந்ததை கண்டு அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இது பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று வரும் பஸ் ஆகும். அப்படிப்பட்ட பஸ்ஸில், கியர் லிவருக்கு பதிலாக மூங்கில் குச்சியை பொருத்தி இயக்கிய டிரைவர் ராஜ்குமாரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். அத்துடன் பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வந்த பஸ்ஸையும் பறிமுதல் செய்தனர்.

இதன்பின் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன. கடந்த 2-3 நாட்களாகவே மூங்கில் குச்சி மூலம்தான் ராஜ்குமார் பஸ்ஸை இயக்கி வந்துள்ளார்.

கியர் லிவரை மாற்றுவதற்கு நேரம் இல்லாததால்தான், மூங்கில் குச்சியை பொருத்தி பஸ்ஸை இயக்கியதாக போலீசாரிடம் ராஜ்குமார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ரஸ்லேன் தளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி முதற்கட்ட விசாரணைக்கு பின் ராஜ்குமார் பெயிலில் விடுவிக்கப்பட்டார்.

பள்ளி குழந்தைகள் பயணம் செய்யும் பஸ் இப்படி அஜாக்கிரதையாக இயக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
சம்பவம் நடைபெற்ற சமயத்தில், பஸ்ஸில் குழந்தைகள் இருந்தனரா? என்பது உறுதியாக தெரியவில்லை. கியர் லிவருக்கு பதிலாக மூங்கில் குச்சி பொருத்தப்பட்டு பஸ் இயக்கப்பட்ட சம்பவம் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிர்வாகத்திற்கு தெரியாது என கூறப்படுகிறது.

அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அத்துடன் பள்ளியின் போக்குவரத்து கமிட்டி இதுதொடர்பாக விசாரணை நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை போலீஸ் விசாரணை நடத்த நேரிட்டால், முழு ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாகவும், இதனால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார்கள் உள்ளன. இச்சம்பவம் அதனை உறுதிபடுத்துவது போல் உள்ளது.


Click it and Unblock the Notifications








