எம்ஜி ஹெக்டர் காருக்கு விளம்பரம் செய்யப்போய் கோவை சிட்டிசன்களிடம் வசமாக சிக்கிய பத்திரிக்கையாளர்!
பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி வரும் 20ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக, இந்த எஸ்யூவியை பிரபலப்படுத்தும் முயற்சிகளில் எம்ஜி மோட்டார் ஈடுபட்டுள்ளது.

கோவை நீலம்பூரில் புதிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அப்போது, இந்த புதிய எஸ்யூவியை முதியவர் ஒருவர் உட்புறத்தை ஆர்வமுடன் பார்க்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படத்தை எவோ இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியர் சிரிஷ் சந்திரன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மேலும், அந்த படத்துக்கு சிரிஷ் ஒரு கேப்ஷனையும் போட்டுள்ளார். அதில், " கோயம்புத்தூர் போன்ற சிறிய நகரங்களில் எம்ஜி ஹெக்டரை காண்பதற்கு பொதுமக்கள் காட்டும் ஆர்வம் வியக்க வைக்கிறது," என்று போட்டுவிட்டார்.

போட்டதுதான் தாமதம். இதனை பார்த்த கோவைவாசிகள் சும்மா விட்டுவார்களா என்ன? கோயம்புத்தூர் சிறிய நகரமா? 'லொல்' என்று ஒருவர் கமெண்ட் அடித்துள்ளார். மற்றொருவர் கோயம்புத்தூர் சிறிய நகரமாக? உங்களது அறிவு வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம் என்று நாசூக்காக கடிந்து கொண்டுள்ளார்.

"பாரம்பரியமாக கோவையில் ஏராளமான வாகன பிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாகன நிறுவனமும் கோவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்று சசிகுமார் நடராஜன் தெரிவித்துள்ளார்.

அஜய் என்பவர், நான் சென்னையை சேர்ந்தவன். சென்னையை விட கோவைக்காரர்கள்தான் விலை உயர்ந்த கார்களை அதிகம் வாங்குகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

வினோத் ஸ்ரீ ராமுலு அடித்துள்ள கமென்ட்டில், "கோவைக்கு வாருங்கள். சில மெட்ரோ நகரங்களைவிட கார் பராமரிப்புக்கும், ஆட்டோமொபைல் துறை நிபுணர்களும் நிறைந்த இடம் என்று தெரிவித்துள்ளார்.

சிறிய நகரான கோவையை சேர்ந்த நாங்கள் டிரக்குகள் மற்றும் பஸ்களை வாங்குவதில் மும்முரமாக உள்ளோம். எம்ஜி ஹெக்டர் போன்ற சிறிய கார்களை வாங்குவது குறித்து பரிசீலிப்போம் என்று பிரவீண் தெரிவித்துள்ளார்.

சிரிஷ் உங்களது பத்திரிக்கை ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அடுத்த அப்ரசைல் வரை வேலையில் இருப்பது கஷ்டம் என்று ஒருவர் காட்டமாக கூறி இருக்கிறார். இதுபோன்ற கோவைக்காரர்களும், ஆட்டோமொபைல் துறையினரும் சாரை சாரையாக கமென்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

தென்னகத்தின் மான்செஸ்டராக கருதப்படும் கோயம்புத்தூர் கார் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, சொகுசு கார் விற்பனையில் தமிழகத்தின் தலைநகர் சென்னையைவிட ஒருபடி மேலே இருக்கிறது.

தமிழகத்தில் அதிக தொழிலதிபர்கள் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பதால், கார் நிறுவனங்கள் கோவைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இதுமட்டுமில்லை, மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலும் பல ஜாம்பவான்களை கோவை வழங்கி இருக்கிறது.

கோவை கரிவர்தன், இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 வீரர் நரேன் கார்த்திகேயன் போன்ற பல மோட்டார்ஸ்போர்ட்ஸ் ஜாம்பவான்கள் கோவையை சேர்ந்தவர்கள்தான். ஆனால், இந்த அடிப்படை விஷயங்கள் புரியாமல் எம்ஜி ஹெக்டருக்கு விளம்பரம் கொடுக்கப்போய் சிரிஷ் சந்திரன் நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிக் கொண்டுவிட்டார்.


Click it and Unblock the Notifications








