நல்ல காரியத்திற்காக புதிய கார் வாங்குவோரிடம் இருந்து கூடுதலாக ரூ.500 வசூலிக்க திட்டம்!
சிறப்பு இழப்பீடு நிதியத்திற்கு கூடுதல் நிதி சேர்க்கும் விதத்தில் புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தலா ரூ.500 கூடுதல் தொகை வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வாகனப் பெருக்கம், மோசமான சாலை கட்டமைப்புகள் மற்றும் சாலை விதிமீறல்களால் உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடாக இந்தியா மாறிவிட்டது. நாள்தோறும் சாலை விபத்துக்கள் இல்லாத நாளே எனும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.

இந்தநிலையில், சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தக்கவாறு உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. குறிப்பாக, விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகன ஓட்டிகள் தப்பி ஓடிவிடும் நிலையும் இருக்கிறது. இதில், விபத்தில் பாதிக்கப்படுபவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை இருக்கிறது.

இதனை மனதில் வைத்து மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு புதிய விதிகள் அறிவிக்கப்பட்டன. சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், ஊனமடைவோருக்கும் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழவில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்ககு குறைந்தபட்சம் ரூ.25,000 ஆக இருந்த இழப்பீடு ரூ.2 லட்சம் ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. அதேபோன்று, காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்குவதற்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் சிறப்பு நிதியத்திலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆண்டுக்கு 26,000 பேர் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றனர். 60,000 பேர் வரை காயமடைகின்றனர். இந்த சிறப்பு இழப்பீடு நிதியத்திற்கு ஆண்டுக்கு ரூ.800 கோடி வரை தேவைப்படுவதால், கூடுதல் நிதி சேர்க்கும் விதத்தில் மத்திய அரசு புதிய முடிவு செய்தது.

இதன்படி, புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தலா ரூ.500 கூடுதல் தொகை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான மசோதா தோல்வியடைந்து காலாவதியாகிவிட்டது. இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் முடிந்து கூடுதல் தொகையை பெறுவதற்கு அனுமதி கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தில் மசோதா காலாவதியானாலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

எனவே, அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி உயிரிழப்பவர்கள் மற்றும் நிரந்தர ஊனம் ஏற்படுபவர்களுக்கு இந்த புதிய நிதியம் வாயிலாக இழப்பீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உச்சநீதமன்ற தீர்ப்பு விரைவில் வெளியானவுடன் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.


Click it and Unblock the Notifications








