கார், பைக்குகளில் பாதுகாப்பு அம்சங்களை அதிரடியாக மேம்படுத்திய மோடி அரசு!
கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியதில் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கிய பங்காற்றி உள்ளது. அந்த வகையில், இந்த மாதம் முதல் இந்தியாவில் விற்பனையாகும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

வெளிநாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் பாதுகாப்பு தரம் மிக மோசமாக இருந்து வந்தது. வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அச்சமடைய செய்தன. உலக அளவில் அதிகம் சாலை விபத்துக்கள் நடக்கும் நாடு என்ற அவப்பெயரையும் இந்தியா பெற்றது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விற்பனையாகும் கார்களை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தி ஆய்வுகள் நடத்தியது. இதில், பல கார்கள் மிக மோசமான தர மதிப்பீட்டை பெற்று அதிர்ச்சியளித்தன. இது பெரும் தலைகுனிவாகவும் இருந்தது.

இந்த நிலையில், வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு பல அதிரடி திட்டங்களை நடைமுறைப்படுத்த அதிரடி காட்டியது. குறிப்பாக, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்காரி வாகனங்களில் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த தீவிரம் காட்டினார்.

இதற்காக பல புதிய விதிகளை நடைமுறைக்கு கொண்டு வரவும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனங்களில் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சமாக கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டது.

பெரும்பான்மையான நிறுவனங்கள் தங்களது பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் மேம்படுத்தி அறிமுகம் செய்து விட்டன. மறுபுறத்தில் கடந்த 1ந் தேதி முதல் கார்களிலும் பல பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக், சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அதுகுறித்து எச்சரிக்கும் வசதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, 80 கிமீ வேகத்தை கார் தாண்டினால் எச்சரிக்கும் வசதி, 120 கிமீ வேகத்தை தாண்டும்போது தொடர்ந்து பீப் ஒலி எழுப்பும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

அதேபோன்று, சென்ட்ரல் லாக்கிங் வசதிகளுடன் வரும் கார்களில் கதவுகளை மேனுவலாகவும் திறக்கும் வசதியும் இடம்பெறுகிறது. இந்த அடிப்படை பாதுகாப்பு வசதிகள் நிச்சயம் விபத்துக்களை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என நம்பலாம்.

அதேபோன்று, வரும் அக்டோபர் முதல் கார்களுக்கான புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதனால், உலகத் தரத்திற்கு இணையான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தியாவில் கார்கள் மேம்படுகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், வாகனப் புகையால் காற்று மாசுபடுதலும் குறையும் என்பதால், எரிபொருள் சிக்கனத்தையும் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








