உலகமே வியப்பு! எலெக்ட்ரிக் காரை வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் எவ்வளவு கிமீ பயணிக்கலாம் தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகன உலகில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி வெறும் 10 நிமிடம் சார்ஜ் ஏற்றுவதன் மூலம் எவ்வளவு கிமீ பயணிக்க முடியும்? என்பது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்குவது உறுதி.

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும், வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. மின்சார வாகனங்களை பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக்கும் முயற்சிகளை பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் மிக தீவிரமாக செய்து வருகின்றன.

மின்சார வாகனங்கள் மூலம் கிடைக்கும் பல்வேறு நன்மைகளே இதற்கு முதன்மையான காரணமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்தால், பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் தொகை வெகுவாக குறையும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பது மின்சார வாகனங்களின் தனி சிறப்பாக உள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், காற்று அதிகமாக மாசுபடுகிறது. உலகின் காற்று மாசுபாட்டிற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை முக்கியமான காரணமாக உள்ளது.

இதுபோன்ற காரணங்களால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை கைவிட்டு விட்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இதில், எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம்) குறைவாக இருப்பது மிகவும் முக்கியமானது.

இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் ஏற பல மணி நேரம் எடுத்து கொள்வதும், பின்னடைவாக உள்ளது. இதுவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால், ஒரு சில நிமிடங்களில் எரிபொருள் நிரப்பி கொள்ளலாம். எனவேதான் பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் தயங்குகின்றனர்.

ஆனால் இந்த பிரச்னைக்கு தற்போது ஆராய்ச்சியாளர்கள் தீர்வு கண்டுபிடித்துள்ளனர். அதிக ரேஞ்ச் தரும் வகையில் மின்சார வாகனங்களின் பேட்டரிகளை கண்டறிவது தொடர்பான ஆராய்ச்சிகளும், வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான தொழில்நுட்பங்களை கண்டறிவது தொடர்பான ஆராய்ச்சிகளும் உலகின் பல்வேறு நாடுகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில், அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஃபாஸ்ட்-சார்ஜிங் தொழில்நுட்பம் ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் படி எலெக்ட்ரிக் கார் பேட்டரியை, 360 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில், வெறும் பத்தே நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். அனைத்து மின்சார வாகனங்களிலும் நிலவி கொண்டுள்ள மிகப்பெரிய பிரச்னைக்கு இது அருமையான தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 360 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என்பதால், இந்த புதிய தொழில்நுட்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தை மார்க்கெட்டிற்கு கொண்டு வர ஒரு தசாப்தம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது சுமார் 10 ஆண்டுகள் வரை ஆகலாம்.

இதுபோன்ற தொழில்நுட்பம் சந்தைக்கு வந்தால், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் எந்தவித பிரச்னையும் இருக்காது. ஆனால் ஒரு தசாப்தம் என்பது நீண்ட காலமாகதான் தெரிகிறது. ஆனால் தற்போது இது தொடர்பான ஆராய்ச்சிகள் வேகமெடுத்துள்ளன. எனவே இதற்கு முன்னதாகவே இதை விட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








