புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!
புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் ஸ்பை படங்கள் முதல்முறையாக வெளியாகி இருக்கிறது.

கடந்த 2011ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி சூப்பர் ஹிட் மாடலாக மாறியது. அறிமுகம் செய்யப்பட்ட போது, குலுக்கல் முறையில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு டெலிவிரி கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்தன. பல மாதங்கள் இந்த காருக்காக வாடிக்கையாளர்கள் காத்துக் கிடந்தனர். அந்த நிலை எல்லாம் மாறினாலு்ம், விற்பனையில் ஸ்திரமான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், சந்தைப் போட்டியையும் சமாளிக்கும் விதத்தில், 2015 மற்றும் 2018 வருடங்களில் புதுப்பொலிவு கொடுக்கப்ப்டடு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் தலைமுறை மாடலாக புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மஹிந்திராவின் வட அமெரிக்க தொழில்நுட்ப மையமும், இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனத்தின் ஆலோசனைகளின் அடிப்படையில் இந்த புதிய மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் புரோட்டோடைப் மாடலானது தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி முழுவதுமாக அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்காலிகமான ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

பரிமாணத்தை பொறுத்தவரையில், புதிய தலைமுறை மாடல் நீள, அகல, உயரத்தில் பெரிய கார் மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், உட்புற இடவசதி மேம்பட்டிருக்கும். குறிப்பாக, மூன்றாவது வரிசை இருக்கையின் இடவசதி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியானது மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கும். மிக இலகுவான, உறுதியான கட்டமைப்பை பெற்றிருக்கும். மேலும், சிறப்பான கையாளுமை மற்றும் அதிக எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.

உட்புறத்திலும் தரமான பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அத்துடன், பாதுகாப்பு அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. இந்த காரில் இரட்டைக் குழல் சைலென்சர்கள் இடம்பெற்றிருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு அம்சத்தை பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 180 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.
Source: Timvix/YouTube


Click it and Unblock the Notifications








