புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் அறிமுக தேதி வெளியானது!
புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 காரின் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பட்ஜெட் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் பிரிமீயம் ரக மாடலாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் நிறைவான அம்சங்களுடன் வாடிக்கையாளர் தேர்வில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மூன்றாம் தலைமுறை மாடலாக அறிமுகமாக இருக்கும் இந்த புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

இதனிடையே, அதற்கு ஒரு மாதம் முன்னதாகவே, வரும் ஆகஸ்ட் 20ந் தேதி புதிய க்ராண்ட் ஐ10 கார் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. உலகிலேயே இந்த மூன்றாம் தலைமுறை க்ராண்ட் ஐ10 கார் இந்தியாவில்தான் முதலாவதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

அதாவது, தனது தாயகமான தென்கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த அளவு இந்திய சந்தையை மிக முக்கியமானதாக ஹூண்டாய் கருதுகிறது.

மேலும், வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட இருக்கும் அதே தரத்திலான மாடல்தான் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியில் எந்த மாற்றங்களும் இருக்காது என்று தெரிகிறது.

கடந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்த புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மில்தான் புதிய க்ராண்ட் ஐ10 காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் பரிமாணத்திலேயே புதிய மாடலும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவிலும், தென்கொரியாவிலும் உள்ள ஹூண்டாய் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பொறியாளர்கள் இணைந்து இந்த புதிய க்ராண்ட் ஐ10 காரை உருவாக்கி இருக்கின்றனர். சென்னையில் உற்பத்தி செய்யப்படும் க்ராண்ட் ஐ10 கார் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். துருக்கியில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படும்.

தற்போது விற்பனையில் உள்ள மாடலில் பயன்படுத்தப்படும் எஞ்சின்கள் மேம்படுத்தப்பட்டு தக்க வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் சற்று கூடுதலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். மாருதி ஸ்விஃப்ட் காரை குறிவைத்து இந்த கார் நிலைநிறுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








