விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார்
புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் விற்பனை புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த 1999ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் சான்ட்ரோ கார் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வந்தது. இந்தநிலையில், சந்தைப்போட்டி மற்றும் புதிய மாடல்களின் வரவால், 2014ம் ஆண்டு சான்ட்ரோ கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. எனினும், வாடிக்கையாளர் மனதில் சான்ட்ரோ கார் பெயருக்கு தனி மதிப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் சான்ட்ரோ பெயரில் புதிய மாடலை ஹூண்டாய் களமிறக்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.3.90 லட்சம் ஆரம்ப விலையில் இந்த பட்ஜெட் கார் பழைய சான்ட்ரோ காரிலிருந்து முற்றிலும் புதிய வடிவமைப்பில் வந்தது. மேலும், அதிக இடவசதி, தொழில்நுட்பங்கள் என பட்ஜெட் வாடிக்கையாளர்களை வசியம் செய்தது.

இந்த நிலையில், புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனை 50,000 யூனிட்டுகள் என்ற புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதாவது, விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 6 மாதங்களில் இந்த சாதனையை தொட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதற்கு பல்வேறு விஷயங்கள் காரணங்களாக அமைந்துள்ளன. மேலும், அதிக உறுதிமிக்க ஸ்டீல் கட்டமைப்பில் வந்துள்ளதால், பாதுகாப்பு தரத்திலும் மேம்பட்டுள்ளது.

புதிய சான்ட்ரோ கார் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 101 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது. சிஎன்ஜியில் இயங்கும் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த கார் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதுதவிர, எல்பிஜி- பெட்ரோல் மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது புதிய சான்ட்ரோ காரின் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 20.3 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின் இருக்கைகளுக்கான தனி ஏசி வென்ட்டுகள், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் ப்ரீடென்ஷனர் உள்ளிட்ட பல வசதிகளை பெற்றிருக்கிறது.

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.90 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டதுடன், அது முதலில் விற்பனையாகும் 50,000 யூனிட்டுகளுக்கான அறிமுகச் சலுகை விலையாக அறிவிக்கப்பட்டது. தற்போது விற்பனை 50,000ஐ கடந்துள்ளதால், சான்ட்ரோ காரின் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அத்துனை அம்சங்களுடன் மிக சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் தொடர்ந்து விற்பனையில் கலக்கி வருகிறது. தற்போது ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை வழங்கும் மாடல்களில் ஒன்றாகவும் இருக்கிறது. வரும் காலங்களில் புதிய விற்பனை உச்சங்களை சான்ட்ரோ பிராண்டு எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








