இந்தியாவில் புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம்!
இந்தியாவில் புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் புதிய ஸ்பை படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அந்த ஸ்பை படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

2020 மாடலாக பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக, இந்த எஸ்யூவி தற்போது இந்திய சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பெங்களூரில் வைத்து புதிய டிஃபென்டர் எஸ்யூவி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களை ஓவர்டிரைவ் தளம் வெளியிட்டுள்ளது. இதில், அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எஸ்யூவி 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது.

எனினும், இந்தியாவில் சோதனையில் இருப்பது 5 கதவுகள் கொண்ட மாடல் என்பது உறுதியாகி இருக்கிறது. இந்த எஸ்யூவி தனக்கே உரித்தான பெட்டி போன்ற டிசைனில் வர இருக்கிறது. மேலும், இதன் பின்புற கதவில் ஸ்பேர் வீல் பொருத்தப்படவில்லை. ஆனால், விற்பனைக்கு வரும்போது தயாரிப்பு நிலை மாடலில் இடம்பெறும் என்று நம்பலாம்.

இந்த எஸ்யூவி புதிய டி7எக்ஸ் என்ற பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மோனோகாக் சேஸீ முன்பைவிட அதிக உறுதியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, லேடர் ஃப்ரேம் சேஸீயைவிட மூன்று மடங்கும் அதிக உறுதித்தன்மையை பெற்றுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளில் டிஃபென்டர் 110 என்ற பெயரில் விற்பனையில் இருக்கும் இந்த மாடலானது பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் வகை எரிபொருள் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், பி-300 என்ற குறிக்கப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 269 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பி-400 என குறிக்கப்படும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 48V மைல்ட் ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடலானது அதிகபட்சமாக 396 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டி200 டீசல் எஞ்சின் மாடல் 197 பிஎச்பி பவரையும் 430 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் டி- 240 டீசல் எஞ்சின் வேரியண்ட்டானது 237 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த காரில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரிட் மாடல்கள் என அனைத்துமே 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படுகிறது.

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், 20 அங்குல அலாய் வீல்கள், டியூவல் டோன் வண்ணத் தேர்வுகள், பிரம்மாண்டமான பம்பர் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த காரில் 12.3 அங்குல முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஆஃப்ரோடு பயன்பாட்டிற்கு ஏற்ப விசேஷ மிதியடிகளும் வழங்கப்படுகின்றன. இருக்கைகள் ஃபேப்ரிக் மற்றும் லெதர் கலவையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இந்த காரில் இடம்பெற்றிருக்கிறது. இது ஆஃப்ரோடு பயன்பாட்டின்போது மிக சிறந்த பாதுகாப்பையும், ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்கும். க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 360 டிகிரி முப்பரிமாண கண்காணிப்பு கேமரா, நீர்நிலைகளை கடக்கும்போது நீரோட்ட வேகத்தை கண்டறிய உதவும் தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

புதிய லேண்ட்ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி ஏற்கனவே லேண்ட்ரோவர் இந்தியா நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Overdrive


Click it and Unblock the Notifications








