மாற்றி யோசிக்கும் மஹிந்திரா... புதிய அவதாரம் எடுக்கும் தாரில் இந்த ஆப்ஷன் வழங்கப்படுகிறதா?
புதிய தலைமுறை மஹிந்திரா தார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, அடுத்த தலைமுறை எக்ஸ்யூவி500, ஸ்கார்பியோ மற்றும் தார் ஆகிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

இதில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நடப்பு ஆண்டு தொடக்கம் முதல், சாலை சோதனை செய்யப்படும்போது, மஹிந்திரா தார் பலமுறை கேமரா கண்களில் சிக்கியுள்ளது.

அனேகமாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் அடுத்த தலைமுறை மஹிந்திரா தார் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம் தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களை வைத்து பார்க்கையில், தற்போது உள்ள மாடலை காட்டிலும், புதிய தலைமுறை மஹிந்திரா தார் அதிக நீளமாகவும், பெரிதாகவும் வரும் என தெரிகிறது.

இதன் இன்டீரியரில்தான் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தலைமுறை மஹிந்திரா தாரில், புதிய டேஷ்போர்டு மற்றும் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் அப்டேட் செய்யப்பட்ட மற்றும் புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை மஹிந்திரா தாரில் வழங்கப்படவுள்ள இன்ஜினை பற்றிய தகவல் மட்டும் தற்போது வரை வெளியாகவில்லை.

அதே நேரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையிலான இன்ஜின் மஹிந்திரா தாரில் இருக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இருந்தபோதும் 2.0 லிட்டர், 4-சிலிண்டர், டீசல் இன்ஜின் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரை வெளிப்படுத்த கூடிய திறன் வாய்ந்ததாக இருக்கும். இதில், மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படும். அதே நேரத்தில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனலாக வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் 3 டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. ரூ.6.72 லட்சம் முதல் ரூ.9.49 லட்சம் வரையிலான விலையில் மஹிந்திரா தார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மஹிந்திரா தார் ஆஃப் ரோடு வாகனம் ஆகும். ஆனால் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் தார் எஸ்யூவியை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் சிந்தித்து வருவது ஏன்? என்பது தெளிவாக தெரியவில்லை.

ஏனெனில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலேயே இது சிறப்பாகதான் செயல்படுகிறது. ஆனால் உறுதியான தகவல் வெளியாகாததால், இது வெறும் புரளியாக கூட இருக்கலாம். எனவே காத்திருந்தால் மட்டுமே நமக்கு உறுதியான விடை கிடைக்கும்.
Image Source: CarBlogIndia


Click it and Unblock the Notifications








