புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பை படங்கள்!
புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகி இருக்கின்றன. அதன் அடிப்படையில் விபரங்களை காணலாம்.

இந்திய ஆஃப்ரோடு பிரியர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் எஸ்யூவி விளங்குகிறது. இந்த நிலையில், கால மாற்றத்திற்கு ஏற்ப முற்றிலும் புதிய தார் எஸ்யூவியை மஹிந்திரா உருவாக்கி இருக்கிறது.

தற்போது இந்த புதிய தலைமுறை தார் எஸ்யூவியை நாட்டின் பல்வேறு சீதோஷ்ண நிலைகளில் வைத்து மஹிந்திரா சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது. அந்த வகையில், அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த மஹிந்திரா தார் எஸ்யூவியின் ஸ்பை படங்களை கார்தேக்கோ தளம் வெளியிட்டு இருக்கிறது.

தோற்றத்தில் தற்போதைய தார் எஸ்யூவியின் சாயல் வெளிப்பட்டாலும், உருவத்தில் பெரிதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. நீள, அகலம், உயரத்தில் தற்போதைய மாடலைவிட பெரிதாக தெரிகிறது. மேலும், புதிய க்ரில் அமைப்பு, பம்பர் அமைப்புடன் வருவதும் தெரிகிறது.

ஓட்டுனர் மற்றும் அமர்வதற்கு சிறப்பான வகையில் காரின் உட்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் அமைப்பு, இருக்கை அமைப்புகள் மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய தார் எஸ்யூவியில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. தவிரவும், சில அடிப்படை வசதிகளும் இடம்பெறும். மேலும், டியூவல் ஏர்பேக்குகள், ஹை ஸ்பீடு அலர்ட், சீட் பெல்ட் ரீமைன்டர், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட இருக்கின்றன.

மஹிந்திரா தார் எஸ்யூவியில் தற்போது 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 63 பிஎச்பி பவரையும், 193 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த வல்லதாகவும், 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் பெற்றுள்ளன.

ஆனால், புதிய தலைமுறை தார் எஸ்யூவியில் முற்றிலும் புதிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட தரத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மஹிந்திரா எஸ்யூவிகளில் பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் எஞ்சினுக்கு மாற்றாகவும் இந்த எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவிக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். மேலும், புதிய தலைமுறை தார் எஸ்யூவி ஆஃப்ரோடு பிரியர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
Source:Cardekho


Click it and Unblock the Notifications








