2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரில் அட்டகாசமான மாற்றங்கள்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் இதோ...
இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா, பிஎஸ்6 தரம் கொண்ட வாகனங்களை இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருட துவக்கத்திலோ தான் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏனெனில் இந்நிறுவனம் தற்சமயம் பிஎஸ்6 கார்களை இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வரும் வேலையில் தீவிரமாக உள்ளது.

இதனால் இந்நிறுவன கார்களின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது விரைவில் அறிமுகமாகவுள்ள மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்ஸின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ள இக்காரின் ஹெட்லைட்ஸுக்கு பதிலாக தற்காலிக லைட்ஸ் பொருத்தியுள்ளனர். பொதுவாக சோதனை ஓட்டத்தில் இவ்வாறான தற்காலிக லைட்கள் பயன்படுத்துவது வழக்கம்.

கருப்பு தேன்கூட்டின் வடிவில் இதன் க்ரில் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்காரின் முன்பகுதி வித்தியாசமான தோற்றத்தை பெற்றுள்ளது. மேலும் இந்த புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் பின்புறத்திலும் பக்கவாட்டிலும் தற்போதைய மாடலை விட புதிய டிசைன்களை கொண்டுள்ளது.

உட்புற பகுதியிலும் மாற்றம் அடைந்துள்ள இக்கார், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கும் விதத்திலான இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உட்புற வேலைப்பாடுகளால் புதுமையான மற்றும் நிம்மதியான கேபினை உணரலாம். டியூவி300 ப்ளஸ் காருடன் 2020 மஹிந்திரா தார் மற்றும் ஸ்கார்பியோவின் அடுத்த தலைமுறை மாடல் கார்கள் வெளியாகவுள்ளன.

தற்போதைய டியூவி300 மாடலின் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 120 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் புதிய டியூவி300-ல் மிக பெரிய அப்டேட்டாக பிஎஸ்6 என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளதால் இதைவிட ஆற்றல் மற்றும் டார்க் திறனின் அளவுகள் கண்டிப்பாக அதிகமாக இருக்கும்.

மஹிந்திரா நிறுவனம் கடந்த 2018ல் டியூவி300 ப்ளஸ்ஸை அறிமுகப்படுத்தியது. தனது முந்தைய மாடலான டியூவி300 எஸ்யூவி அடிப்படையில் இந்த டியூவி300 ப்ளஸ் உருவாக்கப்பட்டிருந்தாலும் அந்த மாடலை விட இக்கார் 445 மிமீ அளவில் பெரியது. இதனால் டியூவி300-ல் ஏழு இருக்கைகள் தான் உள்ளன. ஆனால் டியூவி300 ப்ளஸ்ஸில் ஒன்பது இருக்கைகள் உள்ளன.

ஆனால் இந்த இருக்கைகள் மற்றும் காரின் அளவை தவிர இவ்விரு கார்களுக்கும் வேறெந்த வித்தியாசம் இல்லை. கடந்த 2015ல் வெளியிடப்பட்ட டியூவி300 எஸ்யூவி-ல் தற்போது வரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் விரைவில் வெளியாகவுள்ள டியூவி300 ப்ளஸ்ஸின் பிஎஸ்6 மாடலில் பல புதிய மாற்றங்களை மஹிந்திரா நிறுவனம் நிச்சயமாக கொண்டு வந்திருக்கும்.

வெளியாகவுள்ள இந்த டியூவி300 ப்ளஸ் மாடலுடன் போட்டியிட இந்த ஆண்டில் மாடர்னான பல உட்புற மற்றும் வெளிப்புற டிசைன்களில் வெளியான டாடா ஹெரியர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்கள் தயாராக உள்ளன. ஆனால் மஹிந்திரா நிறுவனம் புதிய டியூவி300 ப்ளஸ் கண்டிப்பாக வாடிக்கையாளர்களிடையே பெரிய அளவில் கவனத்தை பெறும் என நம்புகிறது.
மேலும் மஹிந்திரா நிறுவனம் வரவுள்ள தீபாவளி பண்டிக்கைக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகளை தனது பிரபலமான மாடல் கார்களுக்கு அறிவித்துள்ளது. அதனை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

இந்திய எஸ்யூவி கார்களின் பிரிவு, முன்னணி நிறுவனங்களின் நேரடியான போட்டியால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு மாடலும் வித்தியாசமான ஸ்டைலான வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்களை கொண்டுள்ளதால், எந்த காரை வாங்குவது என வாடிக்கையாளர்கள் குழம்பி போய் உள்ளனர். இந்த டியூவி300 ப்ளஸ் பிஎஸ்6 மாடல் அனைத்து முக்கியமான நகரங்களிலும் 9 இருக்கைகள் மற்றும் புதிய உட்புற டிசைன்களுடன் விரைவில் களமிறங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications








