ஜூனில் அறிமுகமாகிறது புதிய மாருதி ஆல்ட்டோ கார்?
புதிய மாருதி ஆல்ட்டோ கார் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

விற்பனை அடிப்படையில் இந்தியாவின் நம்பர்-1 கார் மாடல் மாருதி ஆல்ட்டோ. மிக குறைவான பட்ஜெட்டில் சிறந்த நன்மைகளை அளிக்கும் கார் மாடலாக வாடிக்கையாளர் மனதில் சிம்மாசனம் போட்டுவிட்டது.

இந்தநிலையில், புதிய கிராஷ் டெஸ்ட் விதிகள் மற்றும் அடுத்த ஆண்டு வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட தரத்துடன் புதிய ஆல்ட்டோ காரை மாருதி சுஸுகி உருவாக்கி இருக்கிறது. தற்போது இந்த மாடல் மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஸ்பை படங்களில் பார்க்கும்போது புதிய மாருதி ஆல்ட்டோ கார் எஸ்யூவி ரக ஸ்டைலில் வர இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, ரெனோ க்விட் காருக்கு இணையான ஸ்டைலில் இருக்கும். கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மாருதி ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய மாடல் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும், புதிய மாருதி ஆல்ட்டோ காரில் 800சிசி மாடல் இனி வெளிவராது. தற்போது ஆல்ட்டோ கே10 காரில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணையாக மேம்படுத்தி மாருதி பயன்படுத்த இருக்கிறது.

புதிய மாருதி ஆல்ட்டோ காரில் எல்இடி டெயில் லைட்டுகள், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. அத்துடன், நிறுவனம் சார்பில் ஏராளமான சிறப்பு ஆக்சஸெரீகளும் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மொத்தத்தில் மாருதி ஆல்ட்டோ கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை தரும் மாடலாக வெளிவர இருக்கிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, ஜூன் அல்லது ஜூலை மாத துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source:Gaadiwaadi


Click it and Unblock the Notifications








