மாருதியின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகமாகிறது
மாருதி சியாஸ் காரில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி கார்களில் தற்போது 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் மிக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர் மத்தியில் இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், மாருதி எர்டிகா, சியாஸ், விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களிலும் இந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகை கார்களுக்கு இது போதிய திறன் கொண்டதாக இல்லை என்று கருத்து நிலவி வருகிறது. மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு திறனுக்கு ஏற்றதாக மேம்படுத்தப்பட வேண்டி இருக்கிறது.

இந்த குறையை போக்கும் விதத்தில், புத்தம் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை மாருதி நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இந்த எஞ்சின் தற்போது உற்பத்திக்கு தகுதியான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பஎஞ்சின் முதலாவதாக சியாஸ் செடான் காரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அடுத்த மாதம் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாருதி எர்டிகா காரிலும், விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட இதர கார் மாடல்களிலும் அறிமுகம் செய்யப்படும்.

மாருதியின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 225 என்எம் டார்க் திறனையுமம் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த எஞ்சின் லிட்டருக்கு 26.82 கிமீ மைலேஜ் வழங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும், இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனவே, அனைத்து விதத்திலும் இந்த எஞ்சின் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

மேலும், புதிய எஞ்சினுடன் கார்களின் விலை ரூ.1.50 லட்சம் வரை கூடுதலாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம்.

தற்போது விற்பனையில் உள்ள 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மாருதி கார்களில் தொடர்ந்து வழங்கப்படும். இந்த எஞ்சின் 89 பிஎச்பி பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படாது என்று தெதரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாருதி நிறுவனத்தின் புதிய சியாஸ் மற்றும் எர்டிகா கார்களில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications







