'டல்' மார்க்கெட்டில் இதைச்செய்ய மாருதியால் மட்டுமே முடியும்... வாயடைத்து போன டொயோட்டா, மஹிந்திரா...
மார்க்கெட் 'டல்' அடிக்கும் சூழலிலும், மாருதி சுஸுகி கெத்து காட்டியுள்ளது. இதனால் டொயோட்டா, மஹிந்திரா நிறுவனங்கள் வாயடைத்து போயுள்ளன.

இரண்டாவது தலைமுறை மாருதி சுஸுகி எர்டிகா கார், 2018ம் ஆண்டு நவம்பர் மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அட்வான்ஸ்டு ஹார்ட்டெக்ட் (Advanced Heartect) பிளாட்பார்ம் அடிப்படையில், 2019 எர்டிகா கார் உருவாக்கப்பட்டுள்ளது.
முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், இது நீளமாகவும், அகலமாகவும், உயரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எம்பிவியின் நீளம் 4,395 மிமீ, அகலம் 1,765 மிமீ, உயரம் 1,690 மிமீ. ஆனால் புதிய எர்டிகாவின் வீல் பேஸை மாருதி சுஸுகி மாற்றவில்லை. இதன் வீல் பேஸ் 2,740 மிமீ.

என்றாலும் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2வது மற்றும் 3வது வரிசைகளில் மாருதி சுஸுகி நிறுவனம் இடவசதியை அதிகமாக்கியுள்ளது. கேப் நிறுவனங்களை நடத்துபவர்களை குறிவைத்தே மாருதி சுஸுகி இதனை செய்துள்ளது.
புதிய தலைமுறை எர்டிகா காரின் பூட் ஸ்பேஸ் 209 லிட்டர்கள். எனினும் இருக்கைகளை மடித்து வைத்து கொள்வதன் மூலம் பூட் ஸ்பேஸை 803 லிட்டர்களாக அதிகரிக்க முடியும். இந்த சூழலில் புதிய எர்டிகா கார் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம், 7,975 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 72 சதவீத வளர்ச்சியாகும். 2018 பிப்ரவரியில் 4,645 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
இதன்மூலம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, மஹிந்திரா மராஸ்ஸோ கார்களை வீழ்த்தி, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக காராக எர்டிகா திகழ்கிறது. 2019 பிப்ரவரியில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா 6,334 யூனிட்களும், மஹிந்திரா மராஸ்ஸோ 2,881 யூனிட்களும் விற்பனையாகியுள்ளன.

மாருதி சுஸுகி எர்டிகா காரில் தற்போது ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது 89 பிஎஸ் பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை மட்டுமே உருவாக்கக்கூடியது. எனவே இதற்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை மாருதி சுஸுகி உருவாக்கி வருகிறது.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் இந்த புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 4,000 ஆர்பிஎம்மில் 95 பிஎஸ் பவரையும், 1,500-2,500க்கு இடைப்பட்ட ஆர்பிஎம்மில், 225 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமை வாய்ந்தது.

புதிய முகப்பு க்ரில் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் செட் அப் ஆகியவற்றுடன் எர்டிகா காருக்கு மாருதி சுஸுகி நிறுவனம் புதிய டிசைனை கொடுத்துள்ளது. பின்பகுதியில் எல்இடி டெயில் லேம்ப் மற்றும் புதிய பம்பர் வழங்கப்பட்டுள்ளது.
எர்டிகா காரின் இன்டீரியரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் எர்டிகா காரின் புதிய பிரீமியம் வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த கார் நெக்ஸா டீலர்ஷிப்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்திய கார் மார்க்கெட் சற்று 'டல்' அடித்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு பின்பே இயல்பு நிலை திரும்பும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலிலும் 72 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, போட்டி நிறுவனங்களை வாய் பிளக்க வைத்துள்ளது மாருதி சுஸுகி.


Click it and Unblock the Notifications








