உயர்த்தப்பட்ட அபராதங்களை 3 மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை... அதிரடி அறிவிப்பு வெளியானது...
உயர்த்தப்பட்ட அபராதங்களை செலுத்துவதில் இருந்து வாகன ஓட்டிகளுக்கு 3 மாதங்கள் விலக்கு அளித்து அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல், புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் முன்பு இருந்தை காட்டிலும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. போலீசார் இதனை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அபராத தொகைகளை மிக கடுமையாக உயர்த்தியதற்கு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபோன்ற அபராத தொகைகள் சாதாரண வாகன ஓட்டிகளை மிக கடுமையாக பாதிக்கும் என அந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இதற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் கூட விதிவிலக்கு இல்லை என்பதுதான் ஆச்சரியம். போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைகள், பாஜக ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இதுதவிர கர்நாடகா, உத்தரபிரதேச மாநிலங்களிலும் அபராதங்களை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

இங்கும் கூட பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழக அரசும் கூட அபராத தொகைகளை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஜார்கண்ட் மாநில அரசு வேறு மாதிரியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், உயர்த்தப்பட்ட அபராதங்களை செலுத்துவதில் இருந்து ஜார்கண்ட் மாநில அரசு, வாகன ஓட்டிகளுக்கு மூன்று மாத காலம் விலக்கு அளித்துள்ளது. அதாவது புதிய அபராத தொகைகள் அங்கு மூன்று மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதற்குள் வாகன ஓட்டிகள் அனைவரும் ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்து கொள்ள வேண்டும்.

உயர்த்தப்பட்ட அபராதங்களை செலுத்துவதில் இருந்து மாநில அரசு மூன்று மாத காலத்திற்கு நிவாரணம் அளித்துள்ளதால், ஜார்கண்ட் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக ஜார்கண்ட் போக்குவரத்து துறை அமைச்சர் சிபி சிங் கூறுகையில், ''மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசால் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

எனினும் இதனால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மனதில் வைத்து, மூன்று மாத கால அவகாசத்தை வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் மக்கள் ஆவணங்களை சரியாக வைத்து கொள்ள முடியும்'' என்றார். அதே சமயம் போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் மக்கள் பின்பற்ற வேண்டுமென அவர் கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''போக்குவரத்து விதிகள் அனைத்தையும் சரியாக பின்பற்றுவதை வாகன ஓட்டிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்'' என்றார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருக்கவே செய்தது. ஆனால் அதன்பின் காவல் துறை காட்டிய கடும் கெடுபிடிகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்து விட்டனர்.

அதேபோல் ஒரு சில வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளும் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இதன் காரணமாக புதிய அபராத தொகைகளை இந்தியா முழுமைக்கும் அமலுக்கு கொண்டு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








