அபராதம் உயர்ந்ததால் படையெடுக்கும் வாகன ஓட்டிகள்... இன்சூரன்ஸ் நிறுவனங்களின் காட்டில் அடைமழை...
அபராதம் உயர்ந்துள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் காட்டில் அடைமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல், மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் அதிரடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும், மறுபக்கம் மிக கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அபராத தொகைகளை மத்திய அரசு உயர்த்தியிருப்பதற்கு, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதே சமயம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அபராத தொகைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருகின்றன. மறுபக்கம் பாஜக ஆளும் குஜராத் மாநில அரசோ, அபராத தொகைகளை அதிரடியாக குறைத்தே விட்டது. இவ்வாறு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் புதிய மோட்டார் வாகன சட்டம் கிட்டத்தட்ட இந்தியா முழுக்க அமலுக்கு கொண்டு வரப்பட்டது விட்டது.

விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசாரும் கடுமையான அபராத தொகைகளை விதிக்க தொடங்கி விட்டனர். இதனால் வாகன ஓட்டிகள் நொந்து போயுள்ளனர். கடுமையான அபராத தொகைகளால், வாகன ஓட்டிகள் துவண்டு போயுள்ள நிலையில், மறுபக்கம் இன்சூரன்ஸ் நிறுவனங்களோ மகிழ்ச்சியில் திளைத்து கொண்டுள்ளன.

ஆம், தற்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் காட்டில்தான் அடைமழை பெய்து கொண்டுள்ளது. முன்பெல்லாம் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் காலாவதியாகி விட்டால், அவற்றை புதுப்பிக்க ஒரு சில வாகன ஓட்டிகள் முன்வர மாட்டார்கள். இதற்காக தனியாக செலவு செய்ய வேண்டுமே என்ற எண்ணம்தான் இதற்கு காரணம்.

ஆனால் தற்போது புதிய அபராத தொகைகள் அமலுக்கு வந்துள்ள காரணத்தால், வாகனங்களின் இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிப்பதில் வாகன ஓட்டிகள் அனைவரும் முனைப்பு காட்டி வருகின்றனர். இல்லாவிட்டால் வீணாக அபராதம் செலுத்த வேண்டியது வரும். முன்பு இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால், ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இது தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு இன்சூரன்ஸ் பாலிசியை புதுப்பித்து கொள்வதே மேல் என்ற மனநிலைக்கு வாகன உரிமையாளர்கள் வந்துள்ளனர். எனவே பாலிசிகளை புதுப்பிப்பதற்காக இன்சூரன்ஸ் நிறுவனங்களை நோக்கி வாகன உரிமையாளர்கள் தற்போது படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

தற்போதைய நிலையில் ஆன்லைன் மூலமாக இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பித்து கொள்வது மிகவும் எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. எனவே வாகனங்களின் பாலிசிகளை புதுப்பிக்கும் விஷயத்தை பொறுத்தவரை, டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தற்போது பிரம்மிக்கதக்க வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன.

இதுகுறித்து டிஜிட் இன்சூரன்ஸ் (Digit Insurance) தலைமை வினியோக அதிகாரி ஜஸ்லின் கோஹ்லி கூறுகையில், ''புதிய சட்டம் அமலுக்கு வந்த பின், மக்கள் தாமாக முன்வந்து பாலிசிகளை புதுப்பித்து கொள்கின்றனர். புதிய சட்டம் அமலுக்கு வந்தது முதல், கடந்த சில நாட்களில், டூவீலர் இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்குவதில் நாங்கள் 300 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளோம்'' என்றார்.

இதுகுறித்து பிஸ்னஸ் ஸ்டாண்டர்டு செய்தி வெளியிட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின் எதிரொலியால், இந்தியாவில் இன்சூரன்ஸ் உள்ள மற்றும் இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி வேகமாக குறைய தொடங்கியுள்ளது. இது வரவேற்க வேண்டிய ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இதனிடையே இன்சூரன்ஸ் வழங்கலில் 300 சதவீத வளர்ச்சி என டிஜிட் இன்சூரன்ஸ் கூறும் நேரத்தில், இந்த எண்ணிக்கையை 500 சதவீதம் என குறிப்பிட்டு பாலிசி பஜார் பிரம்மிக்க வைக்கிறது. அதுவும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து நாட்களுக்குள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

இதுகுறித்து பாலிசிபஜார்.காம் மோட்டார் இன்சூரன்ஸ் பிஸ்னஸ் ஹெட் சஜ்ஜா பிரவீன் சௌத்ரி கூறுகையில், ''தற்போது எங்களது பிளாட்பார்மில் ஒரு நாளைக்கு 67 ஆயிரம் இன்சூரன்ஸ் பாலிசிகளை நாங்கள் விற்பனை செய்து கொண்டுள்ளோம்'' என்றார். இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்கும் இந்த டிரெண்ட் வருங்காலத்திலும் நன்றாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான காரணம் மிகவும் சிம்பிளானதுதான். ஏற்கனவே குறிப்பிட்டதை போல் ஒரு சில மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்கள் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்து விட்டன. எனவே தங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியானால், அவற்றை உடனடியாக புதுப்பிப்பதில் வாகன உரிமையாளர்கள் கவனம் செலுத்துவார்கள்.

புதிய சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாக இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சற்று தடுமாறி கொண்டுதான் இருந்தன. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் தற்போது நிலவி வரும் மந்த நிலையே இதற்கு காரணமாக இருந்தது. வாகனங்கள் பெரிய அளவில் விற்பனையாகததன் தாக்கம் இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் எதிரொலித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








