தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கும் அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகிறது... என்னவென்று தெரியுமா?
தமிழக மக்கள் காத்து கொண்டிருக்கும் அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் மிகவும் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதே இதற்கு காரணம். புதிய அபராத தொகைகள் கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அன்று முதல் வெளியாகி வரும் செய்திகள் வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன. விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது புதிய அபராத தொகைகளை விதிப்பதில் போலீசார் கடுமையான கெடுபிடிகளை காட்டி வருகின்றனர். எனவே ஒரு சில வாகன ஓட்டிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், முன்பு 500 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது தற்போது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்தால், முன்பு 100 ரூபாய் மட்டுமே அபராதம். தற்போது இது 1,000 ருபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாதவர்களுக்கான அபராத தொகையும் 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகை முன்பு 2,000 ரூபாயாக மட்டுமே இருந்தது. இது தற்போது 10,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு விதி மீறல்களுக்கான அபராத தொகையையும் மத்திய அரசு மிக கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் இது வாகன ஓட்டிகளை மிக கடுமையாக பாதிக்கும் என கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குஜராத் போன்ற சில மாநிலங்களில் அபராத தொகைகள் குறைக்கப்பட்டு விட்டன.

கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநில அரசுகள் அபராத தொகைகளை குறைப்பது குறித்து பரிசீலனை நடத்தி வருகின்றன. இதுதவிர தமிழகத்திலும் அபராத தொகைகள் குறைக்கப்பட உள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் அபராத தொகைகளை குறைக்க, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பச்சை கொடி காட்டி விட்டதாக வெளியான அந்த தகவலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால் தமிழகத்தில் அபராத தொகைகளை குறைப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது? வெளியாகும் என்பது தெரியவராமல் இருந்தது. இந்த அறிவிப்பை எதிர்பார்த்து தமிழக வாகன ஓட்டிகள் காத்து கொண்டுள்ளனர். இந்த சூழலில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அபராத தொகைகளை குறைத்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''புதிய மோட்டார் வாகன சட்டத்தில் கூறப்பட்டுள்ள அபராத தொகைகள் தமிழகத்தில் குறைக்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

தமிழகத்தில் அபராத தொகைகளை குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். எனவே விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும்'' என்றார். போக்குவரத்து துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டதால், தமிழகத்தில் அபராத தொகைகள் குறைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. எனவே தமிழக வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








