ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கான்செப்ட் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது!
ஸ்கோடா கமிக் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலானது ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய கார் சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் விதமாக, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான புரொஜெக்ட் 2.0 என்ற திட்டத்தை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 5 புதிய கார் மாடல்களை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக நேற்று வெளியிட்ட செய்தியில் கூறி இருந்தோம். அதில், கமிக் மற்றும் கரோக் எஸ்யூவிகளும் அடங்கும்.

இந்த நிலையில், புத்தம் புதிய கமிக் என்ற மிட்சைஸ் ரக எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவி மாடலானது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கும் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட இருக்கிறது.

மேலும், ஐரோப்பிய மாடலைவிட நீள, அகலத்தில் சற்று பெரிய மாடலாக இந்தியாவுக்காக உருவாக்கப்பட இருக்கிறது. வீல் பேஸ் நீளமும் அதிகம் என்பதால், மிகச் சிறப்பான உட்புற இடவசதியை பெற்றிருக்கும். இந்த புதிய எஸ்யூவிக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை பெருமளவு பயன்படுத்துவதற்கும் ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

புதிய ஸ்கோடா மிட்சைஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரை அளிக்கும் திறனை பெற்றிருக்கும். விலை குறைவான வேரியண்ட்டுகளில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் 115 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் வரும் என்று தெரிகிறது.

இந்தியாவிலேயே உதிரிபாகங்கள் சப்ளை பெறப்பட இருப்பதால், விலை மிக சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Via- Carwale


Click it and Unblock the Notifications