இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார்... புதிய புகைப்படங்கள் இதோ
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மாடலின் எலக்ட்ரிக் வேரியண்ட் கார் அடுத்த மாதம் அறிமுகமாகவுள்ளது. இதனால் இதன் இந்திய சாலைக்கான சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் புனேக்கு அருகே நடந்தப்பட்டுள்ள இந்த காரின் இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தின் புகைப்படங்கள் நமது தளத்திற்கு கிடைத்துள்ளன. டாடா நிறுவனத்தின் ஸிப்ட்ரான் தொழிற்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ளது. ஸிப்ட்ரான் என்பது எலக்ட்ரிக் மோட்டார், பேட்டரி, கியர்பாக்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு மின்னணு சாதனங்கள் அடங்கிய தொகுப்பாகும்.

இந்த நெக்ஸான் காரின் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரை எளிதாக பாதிப்பு அடையாத விதத்தில் டாடா நிறுவனம் தயாரித்துள்ளது. எனவே தான் இந்த பேட்டரி அமைப்பிற்கு தைரியமாக எட்டு வருட உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

பேட்டரியின் திறனை பார்த்தால், ஒரே சார்ஜில் இந்த பேட்டரி சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு காரை இயக்கும் திறன் உடையது. மேலும் ஸிப்ட்ரான் தொழிற்நுட்பமும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளதால், பேட்டரி முழு சார்ஜ் ஆக கூடிய நேரமும் மிக குறைவு. இந்த பேட்டரிக்கு ஆற்றலை வழங்கும் எலக்ட்ரிக் மோட்டார் 300 வோல்ட் திறனில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு துணையாக மேலும் மூன்று எலக்ட்ரிக் கார் மாடல்களை அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் அறிமுகப்படுத்தவும் டாடா நிறுவனம் தீவிரமாக திட்டங்களை தீட்டி வருகிறது. இந்த எலக்ட்ரிக் கார்களுக்காகவே இந்தியா முழுவதும் 300 வேகமாக சார்ஜிங் செய்யக்கூடிய நிலையங்கள் அடுத்த மாதத்தில் இருந்து அமைக்கப்பட இருக்கின்றன.

தற்சமயம் விற்பனையாகி வரும் நெக்ஸானின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களின் டிசைன்களில் தான் இந்த எலக்ட்ரிக் கார்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் க்ரில், பம்பர்ஸ், ஹூட் போன்ற சில வெளிப்புற பாகங்களும் உட்புற பாகங்களும் அப்டேட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மோர்ட்போன்களை பயன்படுத்துவதற்காக இணையதள வசதியையும் இந்த கார் பெற்றுள்ளது.

இதன் அறிமுகத்திற்காக அடுத்த மாதம் 16 முதல் 19ஆம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் அறிமுகத்துடன் டாடா நிறுவனம் தனது மற்றொரு புதிய தயாரிப்பான அல்ட்ராஸ் மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த அல்ட்ராஸ் கார் குறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

இதன் விலை எக்ஸ்ஷோரூம்களில் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.17 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வ விலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டு விற்பனை ஆரம்பிக்கப்பட உள்ளது.
விரைவில் அறிமுகமாகவுள்ள மற்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்களான ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ் இவி மாடல்களுக்கு போட்டியாக இந்த டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் விளங்கும். இவ்வாறு முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களுக்கு மாறி வருவது பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்க எடுத்த வைக்கப்பட்டுள்ள முதல் படியே.


Click it and Unblock the Notifications








