டிசம்பர் 1 முதல் கட்டாயம்... ஒரு பைசா செலவில்லாமல் பாஸ்ட்டேக்கை இலவசமாக வாங்கலாம்... எப்படி தெரியுமா
வரும் டிசம்பர் 1 முதல் கட்டாயமாகவுள்ள பாஸ்ட்டேக் எங்கெல்லாம் இலவசமாக கிடைக்கும்? அதனை பெறுவது எப்படி? என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இடிசி எனப்படும் எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஸன் (ETC - Electronic Toll Collection), வருகின்ற டிசம்பர் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் கட்டாயமாகிறது. அதாவது அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் செய்யப்படுகிறது. எனவே வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பாஸ்ட்டேக் மூலமாக மட்டுமே டோல்கேட் கட்டணத்தை செலுத்த முடியும்.

எனினும் ரொக்கமாக பணம் மூலம் கட்டணத்தை செலுத்த டோல்கேட்களில் ஒரே ஒரு லேன் மட்டும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே ஒரு லேன் மட்டும்தான் என்பதால், நீங்கள் ரொக்கமாக செலுத்தினால், டோல்கேட்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அதுமட்டுமல்லாமல் மற்றொரு அதிரடியான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள், பாஸ்ட்டேக் லேனிற்குள் நுழையும் பட்சத்தில், அவர்களில் இரு மடங்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேவையில்லாத பிரச்னைகளை தவிர்ப்பதற்காக வாகன உரிமையாளர்கள் அனைவரும் வேக வேகமாக பாஸ்ட்டேக்கை வாங்கி வருகின்றனர்.

டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது, கேஷ்லெஷ் பேமெண்ட்டை ஊக்குவிப்பது மற்றும் வாகனங்களின் வேகமான இயக்கத்தை உறுதி செய்வது ஆகிய காரணங்களுக்காகவே பாஸ்ட்டேக் கட்டாயம் செய்யப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் பாஸ்ட்டேக்கிற்கு மாற வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக டோல்கேட்களில் பாஸ்ட்டேக்குகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI - National Highways Authority of India) தற்போது செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கடந்த நவம்பர் 22ம் தேதி தொடங்கப்பட்டது. வரும் டிசம்பர் 1ம் தேதி வரை பாஸ்ட்டேக் இலவசமாக வழங்கப்படும்.

நாடு முழுக்க உள்ள பல்வேறு டோல்கேட்களில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பிஓஎஸ்-ஐ (Point Of Sale - POS) நிறுவியுள்ளது. இவ்வாறு பிஓஎஸ் நிறுவப்பட்டுள்ள டோல்கேட்களில், வரும் டிசம்பர் 1ம் தேதி வரை பாஸ்ட்டேக்குகள் இலவசமாகவே வழங்கப்படும். வாகன உரிமையாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை பிராந்தியத்தில் 26, மதுரை பிராந்தியத்தில் 22 என மொத்தம் 48 டோல்கேட்களில் 90 பிஓஎஸ்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சூழலில் வாகன உரிமையாளர்கள் பாஸ்ட்டேக்கிற்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையில் மற்றொரு அதிரடியான நடவடிக்கையையும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எடுத்துள்ளது.

இதன்படி வரும் டிசம்பர் 1ம் தேதி வரை பாஸ்ட்டேக்குகளை இலவசமாக வழங்கும்படி தனியார் வங்கிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது. பாஸ்ட்டேக்குகளை இலவசமாக வழங்கும்படி ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், எச்டிஎப்சி, இந்தஸ்இந்த் மற்றும் கோட்டக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர்.

பாஸ்ட்டேக்குகளை வழங்கும்போது, வாகன உரிமையாளர்களிடம் பாதுகாப்பு வைப்பு தொகையை கேட்க வேண்டாம் எனவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகள் வாகன உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்டேக் பெற வேண்டுமென்றால், வாகன உரிமையாளர்கள் தங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் தங்களது வாகனத்தின் ஆர்சி புக் ஆகியவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய நிலையில் 40 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே பாஸ்ட்டேக் உள்ளது.

ஆனால் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள காலக்கெடு நெருங்க இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளது. எனவேதான் பாஸ்டேக் முறையை ஊக்குவிக்கும் வகையில் வாகன உரிமையாளர்களுக்கு அதனை இலவசமாக வழங்கும் திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கையில் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








