இலவசம்... டோல்கேட் விஷயத்தில் தரமான நடவடிக்கையை எடுத்தது மத்திய அரசு... என்னவென்று தெரியுமா?
அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக்கை கட்டாயமாக்கும் விஷயத்தில் பாராட்டத்தக்க நடவடிக்கை ஒன்றை மத்திய அரசு எடுத்துள்ளது.

டோல்கேட்களில் வாகன ஓட்டிகள் ரொக்கமாக பணம் செலுத்தி செல்வதால், நேர விரயமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளை தவிர்ப்பதற்காகவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும், வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்து விட்டது. இடிசி எனப்படும் எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஸன் (ETC - Electronic Toll Collection) மூலமாக, வாகன ஓட்டிகள் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள டிசம்பர் 1 காலக்கெடு நெருங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையிலும், பாஸ்ட்டேக் குறித்த விழிப்புணர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரிதாக ஏற்படவில்லை. தற்போதைய நிலையில் மொத்த டோல்கேட் வருமானத்தில் வெறும் 40 சதவீதம் மட்டுமே பாஸ்ட்டேக் மூலமாக கிடைக்கிறது.

ஆனால் நடப்பாண்டு டிசம்பர் முதல் ஒட்டுமொத்த டோல்கேட் வருமானமும் பாஸ்ட்டேக் மூலமாக வசூலாக வேண்டும் என என்எச்ஏஐ எனப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India - NHAI) விரும்புகிறது. இதற்கான நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது முடுக்கி விட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய டோல்கேட்களில் வரும் டிசம்பர் 1ம் தேதி வரை ஒருவரால் பாஸ்ட்டேக்குகளை இலவசமாக பெற்று கொள்ள முடியும். பாஸ்ட்டேக்குகளை (ஆர்எஃப்ஐடி ஸ்டிக்கர்கள்) இலவசமாக விற்பனை செய்யும் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது தொடங்கியுள்ளது.

வரும் டிசம்பர் 1ம் தேதி வரை பாஸ்ட்டேக்குகள் இலவசமாகவே விற்பனை செய்யப்படும். பாஸ்டேக்கிற்கான பாதுகாப்பு வைப்பு தொகை 150 ரூபாயையும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமே ஏற்று கொள்கிறது. எனவே இந்த 150 ரூபாயையும் நீங்கள் செலுத்த வேண்டியதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய தலைவர் எஸ்எஸ் சாந்து இதனை அறிவித்துள்ளார். இதுகுறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ''நவம்பர் 21 மற்றும் டிசம்பர் 1-க்கு இடையே நீங்கள் பாஸ்ட்டேக்குகளை இலவசமாக பெற்று கொள்ளலாம். ஆனால் டிசம்பர் 2ம் தேதிக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை எங்களால் சொல்ல முடியாது'' என்றார்.

அதாவது டிசம்பர் 1ம் தேதி வரை மட்டுமே பாஸ்ட்டேக்குகள் இலவசமாக விற்பனை செய்யப்படும் என்பதை நிதின் கட்கரி சுட்டிக்காட்டியுள்ளார். பாஸ்ட்டேக் இலவசமாக வழங்கப்பட்டாலும், தங்களது கணக்கிற்கு டாப் அப் செய்து கொள்ள வாகன உரிமையாளர்கள் தங்கள் சொந்த பணத்தைதான் செலவழிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு டோல்கேட்களில், பாயிண்ட் ஆஃப் சேல் எனப்படும் பிஓஎஸ்-ஐ (Point of Sale - PoS) இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிறுவியுள்ளது. இங்கு பாஸ்ட்டேக் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பிஓஎஸ்-ஐ நிறுவியுள்ள இடங்களில் மட்டுமே பாஸ்ட்டேக் இலவசமாக வழங்கப்படுகிறது.

பாஸ்டேக் கட்டாயம் என்ற விதிமுறையை மிக கடுமையாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப தற்போது பாஸ்டேக் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








