தமிழகத்தில் உள்ள டோல்கேட்களில் கட்டணம் உயர்கிறது... எவ்வளவு என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
தமிழகத்தில் உள்ள டோல்கேட்களில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. கட்டண உயர்வு எவ்வளவு? என்பது தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியடைக்கூடும்.

தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு டோல்கேட்கள் என்றாலே கடுமையான அலர்ஜிதான். டோல்கேட்களில் வசூலிக்கப்படும் கட்டணம், பர்ஸை பதம் பார்த்து விடுவதே இதற்கு காரணம். எனவே டோல்கேட்களை தவிர்த்து விட்டு, மாற்று வழியில் செல்ல, வாகன ஓட்டிகள் கூகுள் மேப்பில் வழி தேடி கொண்டிருக்கின்றனர்.

வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் செய்து தராமல் கட்டண கொள்ளை அரங்கேற்றப்படுகிறது, கட்டண கொள்ளையை எதிர்த்து கேள்வி எழுப்பினால் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது உள்பட டோல்கேட்கள் மீது மிக நீண்ட காலமாக பல்வேறு புகார்கள் இருந்து வருகின்றன.

எனவே டோல்கேட்களுக்கு நிரந்தரமாக மூடுவிழா நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அவ்வப்போது ஆங்காங்கே போராட்டங்களும் கூட நடத்தப்படுகின்றன. ஆனால் அரசு எதையும் காதில் வாங்கி கொள்ளாததால், வேறு வழியில்லாமல் கேட்கும் கட்டணத்தை வேண்டா வெறுப்பாக கொடுத்து விட்டு, தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.

இந்த சூழலில் வாகன ஓட்டிகளுக்கு மற்றொரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆம், டோல்கேட்களின் கட்டணம் உயரப்போகிறது. அதுவும் தமிழ்நாட்டில். டோல்கேட் கட்டணங்களை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (National Highways Authority of India-NHAI) உயர்த்தவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், வாகன ஓட்டிகள் மத்தியில் கலக்கதை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் 46 டோல்கேட்கள் உள்ளன. இதில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள 20 டோல்கேட்களில் கட்டணம் உயரவுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட டோல்கேட் கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயரவுள்ள டோல்கேட்களின் பட்டியல்:
கனியூர்-செங்கப்பள்ளி-கோயமுத்தூர்
பட்டறைபெரும்புதூர்-திருப்பதி-திருத்தணி
சூரப்பட்டு-சென்னை பைபாஸ்
வானகரம்-சென்னை பைபாஸ்
பரனூர்-தாம்பரம்-செங்கல்பட்டு
ஆத்தூர்-செங்கல்பட்டு-திண்டிவனம்
கிருஷ்ணகிரி-ஓசூர்-கிருஷ்ணகிரி
சாலைப்புதூர்-மதுரை-தூத்துக்குடி
பள்ளிகொண்டா-கிருஷ்ணகிரி-வாலஜாபேட்டை
பெடகல்லுப்பள்ளி (வாணியம்பாடி)-கிருஷ்ணகிரி-வாலஜாபேட்டை

எட்டூர் வட்டம்-மதுரை-கன்னியாகுமரி
கப்பலூர்-மதுரை-கன்னியாகுமரி
நாங்குநேரி-மதுரை-கன்னியாகுமரி
பழைய கந்தர்வகோட்டை-தஞ்சாவூர்-புதுக்கோட்டை
சீத்தம்பட்டி-திருச்சி-மதுரை
பூதக்குடி-திருச்சி-மதுரை
லெம்பாலகுடி-திருச்சி-காரைக்குடி
லட்சுமணப்பட்டி-திருச்சி-காரைக்குடி
சென்னசமுத்திரம்-வாலஜாபேட்டை-பூந்தமல்லி
பெனலூர் (ஸ்ரீபெரும்புதூர்)-வாலாஜாபேட்டை-பூந்தமல்லி

மேற்கண்ட டோல்கேட்களின் சுங்க கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 முதல் 5 சதவீதம் வரை அதிகரிக்க உள்ளது. அதாவது ஒரு வாகனத்திற்கான கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. இதன்படி கார், ஜீப் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ஒரு டிரிப்பிற்கான கட்டணம் 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயரவுள்ளது.

அதேநேரத்தில் தற்போது 90 ரூபாய் கட்டணம் செலுத்தி வரும் இலகுரக வர்த்தக வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் மினி பஸ்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒரு டிரிப்பிற்கு 95 ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். டிரக் மற்றும் பஸ்களுக்கான டோல்கேட் கட்டணம் 190 ரூபாயில் இருந்து 195 ரூபாயாக உயர்கிறது.

மூன்று ஆக்ஸில் வர்த்தக வாகனங்கள் தற்போது 205 ரூபாய் டோல்கேட் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த தொகை 215 ரூபாயாக உயர்கிறது. 7 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆக்ஸில்களை கொண்ட பெரிய வாகனங்களுக்கான டோல்கேட் கட்டணம் 365 ரூபாயில் இருந்து 375 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

மேற்கண்ட 20 டோல்கேட்களில் மட்டும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. எஞ்சிய டோல்கேட்களில் தற்போது உள்ள கட்டணமே நீடிக்கும். ஆனால் அந்த சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதத்தில் கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது. டோல்கேட்களை அகற்ற வேண்டும் என போராடி வரும் நிலையில் வெளியாகியுள்ள இந்த தகவல் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








