பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதின் கட்கரி... என்ன தெரியுமா
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கலாம் என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ள சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக இந்தியா பெரும் தொகையை செலவிட்டு வருகிறது. பொருளாதாரத்தில் இது உண்டாக்கும் தாக்கம் காரணமாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விரும்புகிறது.

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களை குழப்பும் வகையில் உள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூறி வருகின்றன. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை தற்போது திணறி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை கடந்த சில மாதங்களாக அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார மந்த நிலை உள்பட பல்வேறு காரணங்களுக்கு மத்தியில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவும் இதற்கு முக்கியமான காரணம் என்பது ஆட்டோமொபைல் துறையின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த சூழலில் இந்தியாவை படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றுவது தொடர்பாக நிதி ஆயோக் சமீபத்தில் பரிந்துரை ஒன்றை வழங்கியிருந்தது. இதன்படி வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மூன்று சக்கர வாகனங்களும் பேட்டரி மூலம் இயங்குபவையாக இருக்க வேண்டும் என நிதி ஆயோக் கூறியிருந்தது.

அதேபோல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 150 சிசி மற்றும் அதற்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும் என நிதி ஆயோக் தெரிவித்திருந்தது.

இந்த வரிசையில் 2030ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் பரிந்துரைத்திருந்தது. அதாவது ஐசி இன்ஜின் (ICE - Internal Combustion Engine) வாகனங்களுக்கு இந்தியாவில் படிப்படியாக தடை விதிக்க வேண்டும் என்பதுதான் நிதி ஆயோக்கின் யோசனை.

நிதி ஆயோக் தெரிவித்த யோசனைக்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்திய மார்க்கெட்டில் தற்போது நிலவும் மந்த நிலையை கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பணிகளின் வேகத்தை சற்றே குறைத்து கொள்வது என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்த சூழலில் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளபடி பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படாது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தற்போது கூறியுள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதனை நேற்று (ஆகஸ்ட் 23ம் தேதி) தெரிவித்தார்.

அத்துடன் வாகன தொழில்நுட்பத்தை தீர்மானிக்கும் அதிகாரம் நிதி ஆயோக்கிற்கு இல்லை எனவும் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதனை மார்க்கெட்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மீது அரசு எந்தவிதமான தொழில்நுட்பத்தையும் திணிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சுத்தமான வாகனங்களின் தேவையை குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவையை இண்ட்ஸ்ட்ரீ புறக்கணிக்க முடியாது என்பதும் உண்மை எனவும் நிதின் கட்கரி கூறினார். அத்துடன் நமது கவனம் எல்லாம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதில்தான் இருக்க வேண்டும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

தற்போது உள்ள சூழலில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த பேச்சு மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எதிர்காலம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் உள்ளது. இந்த அறிவிப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








